செவ்வாய், 15 ஜனவரி, 2008

பொங்குக பொங்கல்


பொங்குக எங்கும் பொங்கல்
உள்ளத்திலும் இல்லத்திலும்
உவகைப் பொங்கட்டும்
கனவிலும் நனவிலும்
இனியவை தங்கட்டும்
மங்கலம் பொங்கட்டும்
மாண்புகள் பெருகட்டும்

இருள் விலகி
ஒளி பிறக்கட்டும்
நாளைய விடியல்
நமக்காக இருக்கட்டும்

வாழ்வில் வசந்தம்
மலரட்டும்
செல்வம் செழிக்கட்டும்
தமிழர்த் திருநாளாம்
பொங்கல் திருநாளில்
மகிழ்ச்சிப் பொங்கட்டும்


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வளர் அன்புடன்
முனைவர் க.துரையரசன்




திங்கள், 14 ஜனவரி, 2008

தமிழர்த் திருநாள்

தமிழர்த் திருநாளாம்
தைத் திருநாளில்
தரணியெங்கும்
தமிழ்த் தையர்களெல்லாம்
மண் பானைப் பொங்கலிட்டுக்
கதிரவனுக்குப்
பணிவுடனே படையலிடுவர்.

உழைப்பின் அடையாளமாம்
உழவர்களின் உற்ற துணைவனாம் காளைகள்
உழைத்து உழைத்து
உன்னதமான செல்வங்களை
உழவர்களுக்கு
உயர்வு பெற வழங்கிடும்

உதவும் பொருள்களை
உத்தமனாம் உழவனுக்கு
அளித்திட்ட காளைகள்
பயனற்றப் பொருட்களாம்
வைக்கோல் தவிடு உள்ளிட்ட
தேவையற்றப் பொருள்களைத் தானுண்டு
உயிர் வாழ்ந்திடும்

இத்தகு
உத்தமக் குணம் படைத்த
உழவாரப் படையாளிகளுக்கு
உண்மையாய் நன்றிகாட்டும்
உயர்வான விழாவாக
மாட்டுப் பொங்கலை
உளம் குளிர நிகழ்த்திடுவான்
உழவன்



ஞாயிறு, 13 ஜனவரி, 2008

வாழ்த்து

தமிழர் திருநாளாம் தைத் திருநாளில்
தமிழ் மீது அன்பு கொண்ட
உங்கள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த
நல் வாழ்த்துகள்

வெள்ளி, 4 ஜனவரி, 2008

சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்







நோக்கம்:

தமிழக மக்கள் பெரிதும் வேளாண் தொழிலையே நம்பியுள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண் உற்பத்திப் பெரும் பங்காற்றி வருகிறது. இதனால்தான், அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் தொழிலை வளர்ப்பதில் அறிவியலார் முனைப்புக் காட்டி வருகின்றனர். அறிவியல் தொழில் நுட்பத்துடன் கூடிய வேளாண்மையை அறிவியல் வேளாண்மை என்றும் கூறுகின்றனர். அறிவியலும் வேளாண்மையும் இணைந்து நடைபோடுவதால் நல்லதொரு வளர்ச்சிப் பாதையில் இத்துறை முன்னேறி வருகிறது. வேளாண் துறையில் இன்று உள்ளது போல் அறிவியல் தொழில்நுட்பங்களின் பங்களிப்பு மிகப் பழங்காலத்தில் இல்லை. ஆயினும், அக்கால வேளாண்குடி மக்களிடம் உழவு சார்ந்த அறிவியல் சிந்தனைகளின் சுவடுகள் இருந்தமையை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சான்றாதாரங்கள்:

இக்கட்டுரை, சங்க இலக்கியங்களில் காணலாகும் மரபுசார் உழவுத்தொழில் பற்றிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது. அவற்றை இக்கால வேளாண் அறிவியல் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முனைகிறது. இக்கட்டுரைக்குச் சங்க இலக்கியங்கள் முதன்மை ஆதாரங்களாகவும், தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட நூல்கள் துணைமை ஆதாரங்களாகவும் கொள்ளப்படுகின்றன.

உழவின் சிறப்புகள்:

உலகில் நடைபெறும் தொழில்களில் தலைமைத் தன்மை வாய்ந்தது உழவுத் தொழில் எனலாம். இதனால்தான், "சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்" (1031) என்று வள்ளுவர் கூறினார் போலும். இந்த உண்மையை வெளிப்படுத்தும் வகையில்,

"எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்கக் காரோட்டம் என்னவாகும்"

என்று கேள்வி எழுப்புகிறார் கவிஞர் கண்ணதாசன்.

உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்தே அரசாங்கமும் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கும் வகையில் ஐந்தாண்டுத் திட்டங்கள் உள்ளிட்ட நல்ல பல திட்டங்களின் வழி வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

உழவரின் சிறப்பு:

உழவுத் தொழிலைச் (வேளாண் தொழிலை) செய்வோர் உழவர். இவர்கள் இவ்வுலகத்தைத் தாங்கும் அச்சாணியாகத் திகழ்வதை,

"உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து" (1032)

என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இவ்வுலகில் வாழும் எவரும் உழவருக்கு அடுத்த நிலையில் வைத்தே எண்ணத்தக்கவர்கள் என்பதை,

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" (1033)

என்றும் அவர் தெளிவுருத்துதிறார்
இதனால்தான்,
"கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி"
என்று கவிஞர் மருதகாசி பாடுகிறார் போலும்.

மரபுசார் உழவுத் தொழிலின் கூறுகள்:


தமிழகத்தில் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் மரபுவழிப்பட்ட உழவுத் தொழிலின் நடைமுறைகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1. உழுதல் 2. சமன்செய்தல் 3. விதைத்தல் 4. நடுதல் 5. நீர்ப்பாசனம் 6. எருவிடுதல் 7.களையெடுத்தல் 8. பயிர்ப்பாதுகாப்பு 9.அறுவடை 10. தூய்மை செய்தல்

இக்கூறுகள் சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளமையை விளக்கும் முன் உழவுத் தொழிலுக்கு அடிப்படைத் தேவையான நிலம் பற்றிய தொல்காப்பியரின் சிந்தனையைத் தெரிந்து கொள்வோம்.

மருதம்:

பழந்தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுக்கப்பட்டது. இப்பாகுபாடு, தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இருந்தமையை,
"முற்படக் கிளந்த எழுதிணை என்ப" (தொல்.பொருள்.அகத்.1) என்று அவர் கூறுவதன் மூலம் அறியலாம்.

மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியும் ஆகும். இப்பகுதி வேளாண்மை செய்வதற்கு ஏற்றப் பகுதி என்ற உணர்திறனைப் பழந்தமிழர்கள் பெற்றிருந்தனர். உழவுத் தொழிலில் ஈடுபட்ட ஆடவர்கள் உழவர்கள்; பெண்டிர்கள் உழத்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தொல்காப்பியத்துக்கு முன்பு தொடங்கி இக்கால இலக்கண நூல்கள் வரையிலும் மருத நிலம் பற்றிய முதல், உரி, கருப்பொருள்களில் காணலாகும் உழவு சார்ந்த சிந்தனைகள் உழவுத் தொழிலின் பழைமையை எடுத்துக் காட்டுவனவாகும்.

1. உழுதல்:

உழவுத் தொழிலின் இன்றியமையாதத் தொடக்கக் கூறு உழுதல் ஆகும். உழுதல் என்றால் நிலத்தின் மேற்பரப்பில் காணப்படும் கடினத் தன்மை கொண்ட மண்ணை மென்மைத் தன்மை உடையதாக ஆக்குகின்ற வகையில் மேலும் கீழுமாகப் புரட்டுவது. இச்செயல் முறைப்பட செய்யப்படவில்லை என்றால் விளைச்சல் பெருகாது.

நன்செய், புன்செய் நிலங்களில் நன்கு ஆழமாக உழவு செய்து, மண்ணை மேலும் கீழுமாகப் புரட்டி உலரவிடவேண்டும். அப்பொழுதுதான் மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும்; விளைச்சல் பெருகும். இஃது அறிவியல் உண்மை. இதனால்தான் இன்று வேளாண்துறையினர் கோடைப் புழுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உழவர்களிடையே வற்புறுத்தி வருகின்றனர். கோடைப் புழுதி செய்வதன் மூலம் மண்ணின் தன்மை காத்தல், நீர்ச் சிக்கனம் உள்ளிட்ட நன்மைகள் கிட்டும் என்பது வேளாண் துறையினரின் முடிபு. இந்த உண்மையைப் பழந்தமிழர்கள் உணர்ந்திருந்ததை,

"தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப் படும்" (1037)
என்ற வள்ளுவரின் வாக்கு சுட்டுகிறது.

அஃதாவது, ஒரு பலம் புழுதி கால் பலம் புழுதி ஆகும்படி உழுது காயவிட்டால் அந்நிலத்தில் பயிர் நன்கு செழித்து வளருமாம். இவ்வாறு உழவு செய்வோரைப் பலமுறை உழவு செய்வோர் என்ற பொருள்பட "செஞ்சால் உழவர்" (196) என்று பெரும்பாணாற்றுப்படைச் சுட்டுகிறது. இச்செய்தியை,

"........... உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து" (26:23-25)

என்று அகநானூறு குறிப்பிடுகிறது.

கலப்பை:

நிலத்தை உழுவதற்குக் கலப்பை என்ற உழவு கருவியைப் பழந்தமிழர் பயன்படுத்தினர்; இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். "இது உழவர் நிலத்தைப் பண்படுத்த உபயோகிக்கும் கருவி. இது நிலத்திலுள்ள உறுதியாகிய மண்ணினைக் கீழ் மேலாகக் கலப்பது" என்று அபிதான சிந்தாமணி (ப.365) விளக்குகிறது.

இச்சொல், இசைக்கலங்கள் இட்ட பை என்ற பொருளில் புறநானூற்றிலும் (206: 10), உழுதலுக்கு உரிய கருவி என்ற பொருளில் பெரும்பாணாற்றுப்படையிலும் (188) பயின்று வந்துள்ளது. இக்கலப்பையின் அடிப்பகுதி - நிலத்தைக் கிளரும் பகுதி கொழு எனப்படும். இச்சொல்,

"......................... நாஞ்சில்
உடுப்பு முகமுழுக்கொழு மூழ்க ஊன்றி" (பெரும்பாண். 199-200)
"கொழுவல்சி" (மதுரைக்காஞ்சி 141)
"நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின்" (பதிற்றுப்பத்து 58: 17)

என்று பயின்று வந்துள்ளமையைக் காணமுடிகிறது.

இக்கலப்பையினால் மிகக் கடினமாக உள்ள நிலப்பகுதியை உழுவதில் இடையூறு ஏற்பட்டது. எனவே, கொழுவுடன் கூடிய ஏர்க்கலப்பையைப் பழந்தமிழர் பயன்படுத்தியுள்ளமையைக் காணமுடிகிறது. (கொழு - கலப்பையின் அடிப்பகுதி கூர்மையான இரும்புத்தகடு அல்லது இரும்புத் தண்டினால் ஆனது)

இரு வகை உழவு:

உழவர்கள், நன்செய் நிலங்களில் சேற்று உழவும் புன்செய் நிலங்களில் புழுதி உழவும் செய்தனர். "கொல்லை உழுகொழு" (117) என்று கொல்லை நிலத்தை உழுத கொழுவைப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது.

"ஊன்கிழித்தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல நாறி" (194:4-5)

என்பது செம்மண் நிலத்தின் இருபுறமும் புழுதி கீழ் மேலாகப் புரண்டு விழுந்துப் புலருமாறு, கொல்லையில் உழவர்கள் ஏர்கொண்டு உழுதது ஊனைக் கிழித்தாற் போன்று இருந்ததாக அகநானூறு புழுதி உழவு குறித்து இயம்புகிறது.

"அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்" (41: 6) என்று அறுவடை செய்த வயல்களில் அரிதாள் பிளவுபடும்படி சேற்று உழவு செய்ததை அகநானூறு குறிப்பிடுகிறது.

எனவே, சேற்று உழவு செய்வதற்கு மரத்தினால் ஆன கொழு கலப்பைகளையும் புழுதி உழவு செய்வதற்குக் கூரிய இரும்புத்தகடு அல்லது இரும்புத் தண்டினால் ஆன கொழுவுடன் கூடிய கலப்பைகளையும் தமிழர்கள் தொன்றுதொட்டுப் பயன்படுத்தி வருவதைச் சங்க இலக்கியங்கள் வழி உணரமுடிகிறது.
இன்றைய உலகில் டிராக்டர் உள்ளிட்ட உழவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரங்களிலும் சேற்று உழவிற்கும் புழுதி உழவிற்கும் வெவ்வேறு கலப்பைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவைப் பழந்தமிழர் பயன்படுத்திய இருவேறு கலப்பைகளோடு ஒப்பு நோக்கத்தக்கன.

2 .சமன்செய்தல:


நிலத்தை நன்கு உழவு செய்த பிறகு அதைச் சமன் செய்வர். அதாவது நிலத்தின் மேற்பரப்பை மேடு பள்ளங்கள் இல்லாதவாறு இயன்றவரை சரி செய்வர். மேடான பகுதிகளை மண் வெட்டியால் வெட்டித் தாழ்வான பள்ளங்களில் இட்டு உயர்த்துவர். இதனால் நிலத்தில் உள்ள ஒழுங்கற்ற மேடு பள்ளங்கள் சரி செய்யப்படுவதுண்டு. இதனால் நிலம் சமனடையும். இவ்வாறு செய்வதால் நிலத்தின் நீர்ப்பாசனம் ஒரே சீராக இருக்கும். சேற்று நிலத்தில் இவ்வாறு செய்து பரம்பு வைத்த பிறகு விதை விதைப்பதோ அல்லது நடவு செய்வதோ நடைபெறும்.
நன்றாக உழவு செய்த பிறகு சேற்றினை உழவர்கள் கால்களால் நன்கு மிதித்து சமப்படுத்தினர் என்பதை,

"............... செறுவின்
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்" (210-211)

என்று பெரும்பாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.

3. விதைத்தல்:

நிலத்தை நன்கு உழவு செய்து பண்படுத்திய பிறகு விதை விதைப்பர். இச்செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. நெல் விதைத்தல், வரகு விதைத்தல், சாமை விதைத்தல் முதலியவை முல்லை மற்றும் மருத நில மக்களின் தொழில்கள் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
"பல்விதை உழவின் சில்ஏராளர்" (76:11) என்று பதிற்றுப்பத்தும், உழவர்கள் காலையில் விதைப்பதற்காகச் சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச் சென்ற செய்தியை,

".............உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்" (155: 1-2)

என்று குறுந்தொகையும் குறிப்பிடுகிறது.

விதைப்பதற்கு உரிய வித்துகளைப் பழந்தமிழர்கள் நன்கு உலர (காய) வைத்ததற்கான சான்றும் கிடைக்கிறது. "வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்" (211:6) என்று அகநானூறு குறிப்பிடுகிறது. அதாவது , உழவர்களின் விதை நெல்லைப் போன்று கடம்ப மலர்கள் பாறையின் மீது நன்கு காய்ந்து கிடக்கிறதாம்.

இருவகை விதைத்தல்:

இக்காலத்தார் புழுதி விதை, சேற்று விதை என்று இருவகை விதைப்பு முறைகளைச் செய்கின்றனர்.

புழுதி விதை:

நிலத்தை நன்கு உழுது, புலர விட்டு அதன் பிறகு நீர்ப் பாய்ச்சி விதைகளைத் தௌதப்பர். இது பெரும்பாலும் கோடைக் காலங்களில் அல்லது நீர்த் தட்டுப்பாடு உள்ள காலங்களில் நடைபெறும்.

சேற்று விதை:

நிலத்தில் நீர்ப்பாய்ச்சி, நன்கு உழுது சேறாக்கி, தண்ணீர் நிரப்பிய பிறகு விதைகளைத் தௌதப்பர். இது பெரும்பாலும் நீர்த்தட்டுப்பாடற்றக் காலங்களிலும் மழைக் காலங்களிலும் நடைபெறும். இவ்விருவகை செயல்பாடுகளையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

"................. கான்உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து" (209: 2-3)

என்று குறவர் கொல்லையாகிய காட்டினை உழுது பரவலாக விதைத்த விதைகள் பலவாக விளைந்தமையை நற்றிணை காட்டுகிறது.

செம்மண் நிலத்தின் இருபுறமும் புழுதி கீழ் மேலாகப் புரண்டு விழுந்து புலருமாறு, கொல்லை உழவர்கள் ஏர்கொண்டு உழுதனர். ஊனைக் கிழித்தாற் போன்ற சிவந்த மேட்டு நிலத்தைப் பிளந்து சென்ற நெடிய உழவுச் சாலிடத்து விதைத்த விதைகள் முளைத்து வளர்ந்தன. இச்செய்தியை,

"ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல நாறி" (194: 4-5)

என்று அகநானூறு விவரிக்கிறது.
]
நற்றிணையும் அகநானூறும் புழுதியில் விதை விதைத்த செயலைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். சேற்றில் விதை விதைத்த செய்தியைப் பின்வரும் புறநானூற்று வரிகளில் காணமுடிகிறது.

"கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது
கழைக் கரும்பின் ஒலிக்குந்து" (137: 5-6)

அதாவது, நீர் நிறைந்த பள்ளத்தில் விதைத்த, வித்து, நீரின்மையால் சாவாது; கரும்பு போலத் தழைக்குமாம்.

இங்ஙனம் புழுதியிலும் சேற்றிலும் விதைத்த விதைகள் கடும் மழை, கூளம் போன்றவற்றால் பாதிக்கப்படுவதை இன்றும் கண்கூடாகக் காண முடிகிறது. விதைகளைத் தெளித்த ஓரிரு நாட்களில் கடும் மழை பெய்து பரவலாக உள்ள விதைகளைக் குவித்து விடுவது உண்டு. இதை உழவர்கள் விதை குவிந்து போயிற்று (குவிச்சுப் போட்டது) என்று கூறுகின்றனர்.

இது போன்ற ஒரு நிகழ்ச்சி பரிபாடலில் காணப்படுகிறது. உழவர்கள் விதைத்த விதைகளை உடைய நாற்றங்கால், வௌ஢ளத்தால் அடித்து வரப்பட்ட வண்டல் மண்மூடி மேடாகிப் போயிற்று என்ற செய்தியை, "வித்து இடுபுலம் மேடு ஆயிற்றென" (7:35) என்று பரிபாடல் சுட்டுகிறது.

எனவே, விதை விதைத்தலுக்கு உரிய நிலத்தைத் (நாற்றங்காலை) தயார் செய்தல், புழுதியில் விதை தௌதத்தல், சேற்றில் விதை தௌதத்தல், விதைகள் சேதப்படுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. இச்செயல்களைச் செய்ய இன்று விதை தௌத எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் மேற்சுட்டிய செயல்முறைகளே பின்பற்றப்படுகின்றன.

4. நடுதல்:

சேற்று நிலத்தில் நாற்றுக்களைப் பரவலாக ஊன்றும் செயலை நடுதல் என்பர். நடவு செய்வோரை நடுநர் என்று நற்றிணைக் குறிப்பிடுகிறது. மேலும் நாற்றினைச் சேற்றில் அழுத்தி நடுவதை,

"நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த
நடுநரொடு சேறி ஆயின்" ( 60: 7-8)

என்றும் அவ்விலக்கியம் விளக்குகிறது.

நடவு செய்தல் குறித்த செய்தி பெரும்பாணாற்றுப்படையிலும் "முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்" (212) என்று சுட்டப்படுகிறது. நடுநர்கள் செய்த செயலை இன்று நடவு எந்திரங்கள் செய்யத் தொடங்கியுள்ளன.

5. நீர்ப்பாய்ச்சுதல்:

வேளாண்மையின் வெற்றி, நீர்ப்பாசனத்தைப் பொறுத்து அமைகிறது. நீரின்றி அமையா உலகு என்பதை நீரின்றி அமையா உழவு என்று கூறின் மிகையன்று. நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நீர் நிர்வாகம் பற்றிய புரிதல் உழவர்களுக்கு ஊட்டப்படுகிறது. பயிர் விளைவதற்கு நீர் இன்றியமையாதது என்பதை, அன்னையின் கடுஞ்சொல்லை நீராகக் கொண்டு காம நோய் என்ற பயிர் வளர்ந்தது என்பதை "அன்னை சொல் நீராக நீளும் இந்நோய்" (1147) என்று உவமை நயம்பட வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

பாசனத்துக்குத் தேவையான ஆற்று நீர் வாய்க்கால் வழியாக ஓடி வயல்களில் பாய்ச்சப்படுகின்ற அறிவுத் திறம் தமிழர்களுக்குப் பழைமையானது என்பதை,"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி" என்ற ஔவையாரின் வாக்குப் புலப்படுத்துகிறது.

இங்ஙனம் வாய்க்கால் வழியாக ஓடுகின்ற நீரைத் தேவைப்படும் இடங்களில் வாய்க்கால்களின் குறுக்கே சிறு தடுப்புகளை (அணைகளை) ஏற்படுத்தி நீர்ப் பாய்ச்சுகின்றப் போக்கை அகநானூறு மிக அழகாகச் சித்திரிக்கிறது.
உழவர்கள் நெற்பயிரை உடைய தம் வயல்களில் காஞ்சி மரத்தின் சிறு துண்டுகளை நட்டு, இனிய சுவைமிக்க கரும்பின் சிறந்த பல கழிகளைக் குறுக்கே நெருக்கமாக வைத்து அடைத்து அணையாகக் கோலி, அப்பள்ளங்களில் நீரைத் தேக்கிப் பாய்ச்சுவர். இக்காட்சி,

"......கலிமகிழ் உழவர்
காஞ்சிஅம் குறுந்தறி குத்தி, தீம்சுவை
மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்திக்கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை
மீதுஅழி கடுநீர் நோக்கி..........." (346: 5-10)

என்று அகநானூற்றில் அழகுறக் காட்டப்பட்டுள்ளது.

வாய்க்கால்களின் நடுவே சிறு தடுப்பு அணைகளை உண்டாக்கி நீர்ப் பாய்ச்சுகின்ற பழந்தமிழர்களின் அறிவுத் திறத்தோடு வாய்க்கால்களில் தடுப்பு மதகுகளை ஏற்படுத்தித் தரும் அரசாங்கத்தின் செயற்பாட்டை ஒப்பிடத் தோன்றுகிறது. எனவே, நீர் நிர்வாகம் பற்றிய புரிதல் பழந்தமிழர்களிடையே இருந்ததாகக் கொள்ளலாம்.

6. எருவிடுதல்:

உழவுத் தொழிலின் அடிப்படைச் செயல்களுள் ஒன்று எருவிடுதல் ஆகும்.
"ஏரினும் நன்றால் எருவிடுதல்" (1038) என்று வள்ளுவர் எரு இடுதலின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகிறார். விளைச்சலைப் பெருக்கும் வகையிலும் மண் வளத்தைக் காக்கும் வகையிலும் இச்செயல் பழங்காலந்தொட்டே நடைபெற்று வருகிறது. பழந்தமிழர்கள் இயற்கை உரங்களையேப் பயன்படுத்தினர். இன்றைய உழவர்கள் பெரிதும் செயற்கை உரங்களையேப் பயன்படுத்துகின்றனர். செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையைச் சீர்குலைப்பதோடு சுற்றுச் சூழலையும் மாசுபடுத்துகிறது. எனவேதான் இயற்கை உரங்களின் முக்கியத்துவத்தைப் பலரும் தற்பொழுது வற்புறுத்தி வருகின்றனர்.

தொழு உரமும் தழை உரமும்:


பண்டைத் தமிழர்கள் கால்நடைகளின் கழிவுப் பொருள்களாலான தொழு உரத்தையும் இலை, தழைகளாகிய பசுந்தாள் உரத்தையும் பயன்படுத்தினர். இவற்றை உரமாகப் பயன்படுத்தும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது.
ஆடு, மாடு, கோழி முதலானவற்றின் கழிவுப் பொருள்கள் மற்றும் குப்பைக் கூளங்கள் ஆகியவற்றைக் குப்பைக் குழிகளில் இட்டு மக்கச் செய்து அவற்றை வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்துவர். இந்நடைமுறையை இன்றும் சில உழவர்களிடையே காண முடிகிறது. இதில் கால்நடைகளின் கழிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சில வேளைகளில் ஆடு, மாடுகளை இரவு நேரத்தில் வயல்களில் மந்தையாகத் தங்கச் செய்வர். இவ்வாறு செய்வதைக் கிடை கட்டுதல் என்பர்.

கிடைகட்டுகின்ற இச்செயலைப் பதிற்றுப்பத்து, "தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்" (13:1) என்று குறிப்பிடுகிறது. தொறுத்த வயல் என்பதற்கு ஆட்டுக்கிடை கட்டப்பட்ட வயல் என்பர் உரையாசிரியர்.

குப்பைக் கூளங்கள் உரமாகப் பயன்படுத்தப் பட்டமையைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண முடிகிறது.

தாது எரு மறுகின்ஒ (நற்றிணை 343: 3, புறநானூறு 33: 11, 215:2, 311: 3)
தாது எரு மறுகின் மூதூர் (அகநானூறு 165: 4)
தாது எரு மறுத்த கலி அழிமன்றத்துஒ (பதிற்றுப்பத்து 13: 17)
தாது எருத் ததைந்தஒ (மலைபடுகடாம் 531)
இடுமுள் வேலி எருப்படு வரைப்பின்ஒ (பெரும்பாணாற்றுப்படை 154)

போன்ற இடங்களில் பூக்கள் எருவாகிக் கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

அஃதாவது, தெருக்களில் பூக்கள் எல்லாம் உதிர்ந்து எருவாகின என்று கவிஞர் கற்பனை செய்தாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை. உதிர்ந்த இலைகளும் தழைகளும் மலர்களும் குப்பை எருவாதல் என்பது இன்று நாம் கண்கூடாகக் காணும் உண்மை ஆகும்.

உழுந்தின் வேர் முடிச்சுகள் நைட்ரஜன் சத்தைச் சேமித்து வைப்பதாக அறிவியலார் கூறுவர். இதைச் சங்க காலத்தில் பயிரிட்டுள்ளனர். உழுந்து பயிரிடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன.
சான்றாக,

".............உழுந்தின்
அகல இலை அகல வீசி" (நற்றிணை 89: 5-6)
"பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தினி" (குறுந்தொகை 68: 1)
"உழுந்துடை கழுந்தின்" (குறுந்தொகை 384: 1)
"நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன" (ஐங்குறுநூறு 211: 1)
"உழுந்து தலைப்பெய்த தொழுங்களி மிதவை" (அகநானூறு 86: 1)
முதலியவற்றைக் குறிப்பிடலாம். உழுந்து மட்டுமின்றி பயிறும் விளைவித்தமையைப்
"பைம்பயறு உதிர்த்த கோதின்" (297: 3)

என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

எனவே வேளாண் தொழிலுக்குத் தேவையான இயற்கை உரங்களைப் பழந்தமிழர் பயன்படுத்தி உள்ளமை தௌதவாகிறது. மேலும், இயற்கை உரங்களின் பயன்பாடே சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காதது என்பதால் அதை அறிவியலார் இன்று வற்புறுத்துவதும் பழந்தமிழரின் சிந்தனை வளத்தை வௌதக்காட்டுகிறது.

7. களையெடுத்தல்:

வேளாண் தொழிலில் பயிர் செய்யும் விளைபொருள்களுக்குத் தீங்குச் செய்யும் தாவரங்களும் அப்பயிர்களினூடே வளர்வதுண்டு. அவை விளை பயிர்களுக்குக் கிடைக்கும் நீர், உரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இவற்றைக் களைகள் என்பர். இதை ஔவையார்,

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்"

என்று குறிப்பிடுகிறார்.

இக்களைகளை நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இல்லையெனில் விளைச்சல் குறையும். பழந்தமிழர்கள் களைகளை நீக்கியமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன.

"களைகால் கழீஇய பெரும்புன வரகின்" (194:9) என்ற அகநானூற்று வரி, தினைப்புனத்தில் வளர்ந்த களைகளைக் களைக் கொட்டினால் பறித்து தினைப் புனத்தைத் தூய்மை செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.
அதுபோல நன்செய் நிலத்தில் கோரை, நெய்தல் பூ போன்றவை களைகளாக வளரும். அவற்றை உழவர்கள் நீக்குவர்.

சாயும் நெய்தலும் ஓம்புமதி (60: 9) என்ற நற்றிணைப் பாடலில் களைகளாகிய கோரைகளையும் நெய்தல் பூக்களையும் நீக்காதே. அவை இற்செறிப்பில் உள்ள தலைவி வளையலாகவும் ஆடையாகவும் உடுத்தப் பயன்படும் என்று தோழி கூறுகிறாள்.

எனவே, விளை பொருள்களுடன் உண்டாகும் களைகளைப் பழந்தமிழர்கள் நீக்கியமைப் புலனாகிறது. இச்செயலில் தற்பொழுது களை வாரும் எந்திரங்கள் பயன்படுகின்றன.

8. பயிர்ப்பாதுகாப்பு:

களைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாத்தது போல பூச்சிகள், விலங்குகள், பறவைகள் போன்றவைகளிடமிருந்தும் பயிர்களைக் காப்பது பயிர்ப் பாதுகாப்பு எனப்படும். பழந்தமிழர்கள் இப்பயிர்ப் பாதுகாப்பிலும் இயற்கையோடு இயைந்த முறைகளையே பின்பற்றி உள்ளனர். தினைப் புனம் காத்தல் போன்ற செயல்களைப் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கொள்ளலாம். "காவல் கண்ணினம் தினையே" (92: 7) என்றும், "சிறுதினைப் படுகிளி கடீஇயர் (32: 5) என்றும் அகநானூறு குறிப்பிடுகிறது. தினைப் புனம் காத்த செய்திகளைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண முடிகிறது.

9. அறுவடை:

நெல் அறுவடை செய்த செயல் பெரும்பாணாற்றுப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
"பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்
தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர்" (230-231)
என்ற வரிகளில் துமித்த வினைஞர் என்பது அறுவடை செய்யும் உழவரைக் குறிக்கிறது.

பழங்கால உழவர்கள் நெல்லை அறுத்து வந்து போராகக் களத்தில் குவித்து வைத்தனர். அதன் பிறகு கடாக்களை விட்டு நெல்லைப் பிரித்து எடுத்தனர் என்ற செய்தி,

"............ போரின் முழுமுதல் தொளைச்சி
பகடுஊர்பு இழிந்த பின்றை ..................." (237-238)

என்று பெரும்பாணாற்றுப்படையில் சுட்டப்படுகிறது. இச்செய்தியை,

"நீர்சூழ் வியன்களம் பொலிய போர்பு அழித்து
கள்ஆர் களமர் பகடுதலை மாற்றி" (366: 2-3)

என்று அகநானூறு சுட்டுகிறது.

கடாவிடுதல் என்ற செயலானது விடியற் காலையில் நடைபெறுவது என்பதையும் அகநானூறு வைகுபுலர் விடியல் வைபெயர்த்து ஆட்டி (37:5) என்று குறிப்பிடுகிறது.

மருத நில மக்களின் தொழில்களான நெல்லரிதல், கடாவிடுதல் ஆகிய செயல்கள் அறுவடைத் தொழிலைக் குறிப்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
உழவர்கள் அறுவடை செய்த நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டு செல்வர். இவ்வாறு கட்டாகக் கட்டும்பொழுது அரிந்த தண்டுப் பகுதிகளைத் தலைப்பு மாற்றி வைத்துக் கட்டுவதை இன்றும் காணமுடிகிறது.
இங்ஙனம் தலைப்பு மாற்றிக் கட்டுகள் கட்டுவதை அகநானூறு,

"எரிபுரை பல்மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ்சூடு
கள்ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்" (84: 11-13)

என்று அகநானூறு காட்டுகிறது.

அஃதாவது அரிந்த நெற்கதிர்களுடன் கூடிய நெருப்புப் போன்ற மலர்களை மாற்றிவைத்துக் கட்டியக் கட்டுகளை உழவர்கள் களத்தில் கொண்டு சேர்த்தனராம்.

10. தூய்மை செய்தல்:



நெல்லரிந்து, கடா விட்டு நெல்லை வைக்கோலினின்றும் உழவர்கள் பிரித்தெடுத்தனர். அங்ஙனம் பிரித்தெடுத்த நெல்லைக் காற்றில் தூற்றித் தூசு துரும்புகளை அகற்றித் தூய்மை செய்தனர். அவ்வாறு தூற்றும் பொழுது எழும்பிய தூசு துரும்புகள் இருண்ட மேகம் போல தோன்றியது என்பது அகநானூற்றுக் காட்சி.

"பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்
மங்குல்வானின் மாதிரம் மறைப்ப" (37: 3-4)

விரைந்து வீசும் காற்றில் உழவர்கள், நெல்லைத் தூற்றினர். அதிலிருந்து பிரிந்து சென்ற தூசு துரும்புகள் உப்பளப் பாத்திகளில் வீழ்ந்ததை,

"கடுங்காற்று எறிய, போகிய துரும்பு உடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்" (366: 4-5)
என்றும் அகநானூறு காட்டுகிறது.
எனவே, உழவர்கள் நெல்லை அரிந்து, கடாவிட்டுத் தூற்றித் தூய்மை செய்தனர் என்பது புலனாகிறது.

முடிவுரை:

இதுகாறும் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து தமிழர்களின் மரபுசார் உழவுத் தொழிலை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. பழந்தமிழரின் உழவியல் சிந்தனைகள் இன்றைய அறிவியல் சிந்தனைக்குப் படிக்கற்களாக இருந்துள்ளமை விளங்குகிறது. மேலும், பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த உழவுத் தொழிலையே செய்து வந்தனர் என்பது புலனாகிறது.


முனைவர் க.துரையரசன்
உதவி இயக்குநர்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
சென்னை - 113.



 




பழமொழிகள்

1. அகத்தின் அழகு முகத்திலே.
2 ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
3. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
4. இக்கரைக்கு அக்கரை பச்சை.
5. இனம் இனத்தையே சாரும்.
6. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
7. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
8. ஈர நாவிற்கு எலும்பில்லை.
9. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய
10. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
11. உளவு இல்லாமல் களவு இல்லை.
12. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப
13. உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
14. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
15. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
16. எளiயாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
17. எத்தனை ப
18. எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.
19. எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
20. எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
21. எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
22. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
23. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
24. எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
25. எங்கே பர வாசனை?
26. கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
27. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
28. கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
29. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
30. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
31. கடுகு சிறுத்தாலும் காரம் குறைய
32. கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
33. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைய
34. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
35. கரும்பு தின்னக் கூலியா?
36. காலம் போகும் வார்த்தை நிற்கும்.
37. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
38. காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
39. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
40. காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
41. கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
42. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
43. குடல் காய்ந்தால் குதிரைய
44. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
45. குளiக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
46. கெண்டையைப் போட்டு வராலை இழு.
47. கெடுவான் கேடு நினைப்பான்.
48. கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
49. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
50. கைவில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
51. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
52. கையாளாத ஆய 85. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
53. கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
54. சர்க்கரை என்றால் தித்திக்குமா?
55. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
56. சிறு துரும்பு பல்லுக்கு உதவாது.
57. சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
58. சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
59. சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
60. சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
61.சோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.
62. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
63. தன் கையே தனக்கு உதவி.
64. தன் முதுகு தனக்கு உதவி.
65. தன் வினை தன்னைச் சுடும்.
66. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
67. தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
68. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
69. தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
70. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
71. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
72. தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
73. துணை போனாலும் பிணை போகாதே.
74. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
75. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
76. தூங்குகிற பசு பால் கறக்காது.
77. நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
78. நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
79. நிறைகுடம் நீர் தளும்பாது.
80. நிழலின் அருமை வெய்யிலில் தெரிய
81. நிறை குடம் நீர் தளும்பாது.
82. நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
83. நெருப்பு இல்லாமல் புகை இருக்காது.
84. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
85. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
86. பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவ
87. பனங்காட்டு நரி சலசலப்புக்கு பதுங்காது.
88. பாம்பின் கால் பாம்பு அறியும்.
89. பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன். 136. பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி.
90. மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
91. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
92. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
93. வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
94. விளையாட்டு வினையாயிற்று.
95. வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும். 165. வெறுங்கை முழம் போடுமா?
96. வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
97. வெறுங்கை முழம் போடுமா?
98. வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
99. வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?
100. படித்தவன் பாட்டைக் கெடுத்தான்
        எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்

புதன், 2 ஜனவரி, 2008

List of 64 arts /அறுபத்துநாலு கலைகள்

List of 64 arts /அறுபத்துநாலு கலைகள்
"ஆய கலைகள் அறுபத்துநான்கினையும்" என்று பலரும் சொல்லக் கேள்விபட்டிருக்கின்றோம்.
ஆனால் அந்த அறுபத்துநாலுகலைகள் தான் யாவை என்று தெரிவதில்லை. தமிழ் இணைய மின்அஞ்சல் தளத்தில் இது பற்றி கேள்வி, பதில் தொடர் ஒன்று நடைபெற்றது. மலேசியா தமிழ் நண்பர் மா. அங்கையாவின் தொகுப்பை தமிழ் இணைய நண்பர்களுக்காக இந்த தமிழ் மின் நூலகத்தில் கொடுத்துள்ளேன்.
Source courtesy: From Maa.Angaiah of Malaysia
http://www.geocities.com/ResearchTriangle/5828/64kalai.htm
________________________________________
'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்துநாலு கலைஞானம்' என்பது ஆரிய இலக்கியப் பாகுபாடாதலால், 'அறுபத்துநாலு கலை' என்பது தமிழ் மரபன்று. 'அறுபத்துநாலு கலை' என்னும் பொருட்டொகப் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனையவும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்துநாலு கலைப்பட்டி இங்குத் தரப்பட்டுள்ளது.

முதற்பட்டி ஆரிய நூன்மரபை முற்றுந் தழுவியது. வடசொற்களெல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு, தென்சொற்கள் முன்னும் வடசொற்கள் பிறைக்கோட்டுட்பின்னும் குறிக்கப்பட்டுள்ளன. இருமொழிக்கும் பொதுச் சொற்கள் அல்லது ஏற்கெனவே தமிழாயிருக்குஞ் சொற்கள், பிறைக்கோட்டுச் சொல்லின்றித் தமித்து விடப்பட்டுள்ளன.

இரண்டாம் பட்டி பிற்காலத்ததாதலால், சிறிது வெறுபட்டும் பெறும்பாலும் தமிழ்ச் சொற்களைக் கொண்டும் உள்ளது.

அறுபத்துநாலுகலை என்னும் தொகுப்பு, வடமொழிக் காமசூத்திரம் (Kaama Suutra) என்னும் இன்பநூலின் ஆசிரியரான வாத்சாயன (Vaatsaayana) ருடையதாதலால், அந் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பர். சந்தோச குமார முக்கர்சி (Dr. Santhosh Kumar Mukherji) பாகுபடுத்திக் கூறிய அறுபானாற்கலை ஆங்கிலப் பட்டியலை இங்குத் தருகின்றேன்.

அந்த அறுபத்துநாலுகலைகளின் பட்டியலை
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த
செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
(A Comprehensive Etymological Dictionary of the Tamil Language )
Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி
இங்கே பட்டியலிட்டுள்ளேன். தெரிந்துகொள்ளுங்கள்.



அறுபத்துநாலுகலை (பெ.) `காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.

அறுபத்து நாலு கலைகளாவன:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

இணையமும் இனிய தமிழும்

இணையமும் இனிய தமிழும்


முன்னுரை

உலகையே குவலயக் கிராமமாக மாற்றிவிட்ட ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பம்தான் இணையம். இணையத்தில் இல்லாதது எதுவுமே இல்லை என்ற அளவிற்கு அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டதாக இணையம் திகழ்கிறது. கேட்டவர்களுக்குக் கேட்ட வரங்களை - தகவல்களை அள்ளி வழங்கும் அமுதசுரபியாக இது விளங்குகிறது. தகவல் களஞ்சியமாகத் திகழ்கிற இணையத்தில் கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள், அதனை வழங்கும் நிறுவனங்கள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

எல்லாம் இணையம்தான்

இணையம் என்ற ஆற்றல் வாய்ந்த ஆயுதத்தைக் கல்வியாளர்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழ் ஆசிரியர்களும - பேராசிரியர்களும், மாணவர்களும் - ஆய்வாளர்களும் எந்த அளவிற்கு இதனைப் பயன்படுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியே. இவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதன் இன்றியமையாமையை விளங்கிக் கொள்வதோடு அதில் போதிய பயிற்சியும் பெற வேண்டும்.

ஏனெனில், இன்று எல்லா தகவல்களையும் இணையத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். பாட நூல்கள், பாடத்திட்டங்கள், வினா வங்கிகள், தேர்வு முடிவுகள், வேலை வாய்ப்புச் செய்திகள் என அனைத்தும் இணையத்தில் வழங்கப்படுகின்றன.

எனவே, இணையத்தில் அனைத்துத் தகவல்களும் கிடைப்பதனால் அதனைப் பயன்படுத்த முனைவதும் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் திறம் பெறுவதும் நலம் பயக்கும். இதனைப் பிற துறை சார்ந்தவர்கள் நன்கு பயன்கொள்வது போல தமிழ்த்துறை சார்ந்தவர்களும் பயன்கொள்ள வேண்டும்.

மூன்று ‘எ’

முன்பெல்லாம் ஒரு நூலைத் தேடிப் பல்வேறு இடங்களுக்கும், நூலகங்களுக்கும் செல்ல வேண்டும். அங்கு அவை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் இணையத்தில் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் வெகுவாக கிடைக்கின்றன; இலவசமாகக் கிடைக்கின்றன; நூல்வடிவில் கிடைப்பனவற்றை விட பன்மடங்கு வசதிகளோடு கிடைக்கின்றன. எவையெவை - எங்கெங்கு - எவ்வெவ்வாறு கிடைக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டால்,
தங்களின் பொன்னான காலத்தை வீணடிக்காமல் கடமையைக் கண்ணாகக் கருதி செயல்பட்டு வெற்றியடைய முடியும்.






தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை இணையத்தில் வழங்கும் நிறுவனங்களில் முன்னணியில் நிற்பது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஆகும். இந்நிறுவனம் தமிழக அரசினால் 17-02-2001 இல் சென்னையில் உள்ள

தரமணியில் துவங்கப்பட்டது. உலகு தழுவி வாழும் தமிழர்களும் தமிழ் படிக்கும் ஆர்வலர்களும் அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை பயில்வதற்கு உரிய வகையில் இப் பல்கலைக்கழகச் செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டன. இங்கு தற்பொழுது இளங்கலைப் பட்டம் (B.A.) வரையிலான படிப்பு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல்திட்டங்களுள் ஒன்றுதான் இப்பல்கலைக்கழகத்தின் மின் நூலகம்.

த.இ.ப. மின் நூலகம்

இப்பல்கலைகழக மின் நூலகத்தில் தொல்காப்பியம் முதற்கொண்டு இக்கால இலக்கியம் வரையிலான 200க்கும் மேற்பட்ட நூல்கள் இடம் பெற்றுள்ளன. ஏறக்குறைய 75,000 பக்கங்களுக்கு மேல் இம்மின்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.



இலக்கண நூல்கள்

இன்றைய நிலையில் தமிழகத்தில் பெரிதும் பயன்பாட்டில் உள்ளதும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாடமாக அமையப் பெற்றதுமான இலக்கண நூல்கள் முழுவதும் த.இ.ப.வின் மின் நூலகத்தில் உள்ளன. தொல்காப்பியம்,
நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள், தண்டியலங்காரம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், தமிழ் நூல், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகிய இலக்கண நூல்கள் உரையுடன் அமைந்துள்ளன.

இலக்கிய நூல்கள்

சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்களுள் நாககுமார காவியம், உதயணகுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம், திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்கள் இதன்கண் இடம் பெற்றுள்ளன.

சமய இலக்கியங்கள்

பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இயேசு காவியம், சீறாப்புராணம், நெஞ்சில் நிறைந்த நபிமணி, நாயகம் எங்கள் தாயகம், நாயகம் ஒரு காவியம், யூசுப் ஜூலைகா ஆகிய பல்சமய இலக்கிய நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

சிற்றிலக்கியக்கங்கள்

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ், அபிராமி அந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கச்சிக்கலம்பகம், தண்டலையார் சதகம், அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், கொங்கு மண்டல சதகங்கள், பாண்டிமண்டல சதகம், திருக்குற்றாலக் குறவஞ்சி, தியாகேசர் குறவஞ்சி, தணிகைப் புராணம், அட்டபிரபந்தம், புலவராற்றுப்படை, அழகர் கிள்ளைவிடு தூது, தமிழ்விடு தூது, இரணியவதைப் பரணி, கலிங்கத்துப் பரணி, நளவெண்பா, நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் ஆகிய சிற்றிலக்கிய நூல்கள் இந்நூலகத்தில் உள்ளன.

பிற நூல்கள்

மேற்காட்டிய நூல்களேயன்றி சிவப்பிரகாச சுவாமிகள், தாயுமானவ சுவாமிகள், குமரகுருபர சுவாமிகள், பாரதியார், பாரதிதாசன், முடியரசன், அழ.வள்ளியப்பா, தமிழ் ஒளி, தேவநேயப் பாவாணர் ஆகியோரின் படைப்புகள் பலவும் இந்நூலகத்தில் காணக்கிடைக்கின்றன.

மயிலை சீனி.வேங்கடசாமியின் சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு, தெ.பொ.மீ.யின் தமிழ் மொழி வரலாறு, ந.சி.க.வின் தமிழகம், தமிழ் இந்தியா, கா.அப்பாதுரையின் குடியாட்சி, சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம், நா.வானமாமலையின் தமிழர் நாட்டுப்பாடல்கள், காத்தவராயன் கதைப்பாடல், முத்துப்பட்டன் கதை, கி.வா.ஜகந்நாதனின் மலையருவி உள்ளிட்ட பல் வகைமை நூல்கள் இதன்கண் இடம் பெற்றுள்ளன.

அகராதிகளும் கலைச்சொற்களும்

த.இ.ப.வின் மின் நூலகத்தில் இலக்கண, இலக்கிய நூல்களேயன்றி சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி, பால்ஸ் அகராதி, மு.சண்முகம்பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலி ஆகிய நான்கு அகராதிகளும், முப்பதுக்கும் அதிகமான துறைகளைச் சார்ந்த 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட கலைச்சொற்களும் உள்ளன.



சிறப்பம்சங்கள்

ஃ குறிப்பிட்ட நூல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரைகள்
கிடைக்கின்றன.

ஃ திருக்குறளுக்கு தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின்
உரை உள்ளிட்ட எழுவரின் உரைகள் கிடைக்கின்றன.

ஃ சங்க இலக்கியங்களுக்கு எண், சொல், பக்கம், பாடினோர்,
வள்ளல்கள், மன்னர்கள், திணை, கூற்று, பாடல் முதல்
குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், தானியங்கள், பழங்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள் என்ற அடிப்படையில் வேண்டிய செய்திகளை உடனடியாகத் தேடிப் பெறுகின்ற வசதி.

ஃ தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகத்தார்க்கு
எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த 143 சைவ, வைணவக் கோயில்களின் ஒலி, ஒளிக் காட்சிப் பதிவுகள், பரதநாட்டியம், பொம்மலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், நாதசுரம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டுக் காட்சியகம்.
ஃ தேவாரப்பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி.

ஃ அனைவரும் படித்து விளங்கிக் கொள்ள ஏதுவாக எளிய
முறையில் பதம் பிரிக்கப்பட்ட கடின நூல்கள்.

இத்துணை சிறப்பு வாய்ந்ததும் அரியதுமான நல்லதொரு மின் நூலகத்தைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் உருவாக்குவதில் அப்பல்கலைக்கழகத்தின் முதல் இயக்குநரும் இந்நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான முனைவர் பொன்னவைக்கோ அவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

மதுரைத் திட்டம்

இஃது உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புகளை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாகப் பெற வசதி செய்யும் ஒரு தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் ஆகும். இதனை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழர் டாக்டர் கே.கல்யாணசுந்தரம் அவர்கள் தொடங்கினார்கள். இத்திட்டம் எதிர்வரும் சனவரி 2008 இல் தனது பத்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட இருக்கிறது.

________________________________________


இத்திட்டத்தில் ஏறக்குறைய 300 தமிழ் நூல்கள் இணையப் பார்வையாளர்களுக்குக் கிட்ட வகை செய்யப்பட்டுள்ளது. இந்நூல்களை அகர வரிசை, நூல் வரிசை, கால வரிசை அடிப்படையில் டிஸ்கி (TISCII) குறியீட்டு முறையிலும், ஒருங்குறியீட்டு (UNICODE) முறையிலும் இத்திட்டம் வழங்குகிறது.

இத்திட்டத்தின் சிறப்பம்சம் யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்பு செய்து இவர்களின் அனுமதியோடு இம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இத்தொகுப்பில் உள்ள நூல்கள் ஒருங்குறியீட்டு (UNICODE) முறையிலும் கிடைப்பதனால் எழுத்துரு (Fonts) பிரச்சினை இல்லாமல் நூல்களைப் படிக்க முடியும். ஆனால் இத்தொகுப்பில் வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறும் வசதி ஒருசில நூல்களுக்கு மட்டுமே டிஸ்கி (TISCII) குறியீட்டில் உள்ளது. தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவது போல இத்திட்டத்தில் தகவல்களைப் பெற இயலாது. ஆனால் தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகத்தில் நூல்கள் ஒருங்குறியீட்டு முறையில் இல்லாமையால் அதனைக் கண்ணுறுவதில் எழுத்துரு பிரச்சினை ஏற்படுகிறது.

இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனம் (Central Institute of Indian Languages - CIIL)

மைய அரசு நிறுவனமான இது மைசூரில் உள்ள மானசகங்கோத்ரியில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் தமிழ் நூல்களை அதன் பழைமை குன்றாமல் அதாவது மூலப் பிரதியில் உள்ளவாறே இணையவழியில் அளிப்பதற்கான முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. விரைவில் தமிழ் நூல்களை இதன் இணைய தளத்தில் காணலாம்.

தற்பொழுது தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றையும், சங்க இல்கியப் பாடல்கள் சிலவற்றையும் இசைவடிவில் இணையத்தில் வழங்கியுள்ளது. பாடல்கள் மட்டுமின்றி நூற்பாக்களைக்கூட இசை வடிவில் வழங்க முற்பட்டுள்ள இந்நிறுவனத்தின் முயற்சிப் பாராட்டுக்குரியதாகும்.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

ரோஜா முத்தையா செட்டியாரின் நினைவால் சிக்காகோ பல்கலைக்கழகம் இந்நூலகத்தை 1989 முதல் நடத்தி வருகிறது. ஏறக்குறைய 1 இலட்சம் அரிய நூல்களும், இதழ்களும் இந்நூலகத்தில் உள்ளன. நூலாசிரியர், நூலின் தலைப்பு, நூல் வெளிவந்த ஆண்டு என்ற அடிப்படையில் இந்நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல் ஆராய்ச்சியாளர்கள் தேடிப்பெறும் வகையில் இணையத்தில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இருந்த இடத்தில் இருந்துகொண்டே ஆய்வுக்குத் தேவையான நூல்கள் உள்ளனவா என்பதை அறிந்து கொண்டு வேண்டிய நூல்கள் இருந்தால் இந்நூலகத்திற்குச் சென்று பயன் கொள்ளலாம்.

பிற நிறுவனங்கள்

மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் மட்டுமன்றி, 1. Institute of Indology and Tamil Studies, Univ of Koeln, Germany 2. Tamil Heritage Foundation 3. Million Ebooks Project ஆகிய நிறுவனங்களும் தமிழ் நூல்களை இணையத்தில் நேரடியாக வழங்காமல் மதுரைத் திட்டத்தில் இருந்து எடுத்து வழங்குகின்றன. எனவே இவை பற்றி தனித்தனியே குறிப்பிடப்படவில்லை.



முடிவுரை
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே

என்பதற்கேற்ப வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழ் பயில்வோரும் - பயிற்றுவிப்போரும் தங்களின் பணியை எளிமையும் ஏற்றமும் உடையதாக மாற்றிக் கொள்ள இணையம் பெருந்துணையாய் நிற்கும். எனவே, போட்டிகள் நிறைந்த இருபத்தோராம் நூற்றாண்டினைத் தமிழ் படிக்கும் மாணவர்கள் திறனுடன் எதிர்கொள்ள இணையப் பயன்பாட்டில் அவர்களை மேலோங்கச் செய்வோம்.


பயன்கொள்ள வேண்டியவை;

1. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் - www.tamilvu.org
2. மதுரைத் திட்டம் - www.tamil.net/projectmadurai
3. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் - www.ciil.org
4. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் -
www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html

சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களும் படைப்பும்

சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களும் படைப்பும்
வ.எண் படைப்பாளர்கள் படைப்புகள் ஆண்டு
1. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழ் இன்பம் 1955
2 கல்கி அலைஓசை 1956
3 கி.இராஜகோபாலாச்சாரியார் சக்கரவர்த்தித் திருமகன் 1958
4 மு.வரதராசன் அகல் விளக்கு 1961
5 மீ.ப.சோமு அக்கரைச் சீமையிலே 1962
6 அகிலன் வேங்கையின் மைந்தன் 1963
7 பி. ஆச்சாரியா ராமானுஜர் 1965
8 ம.பொ.சிவஞானம் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு 1966
9 கி.வா.ஜெகநாதன் வீரர் உலகம் 1967
10 அ.சீனிவாசராகவன் வெள்ளைப்பறவை 1968
11 பாரதிதாசன் பிசிராந்தையார் 1969
12 கு.அழகிரிசாமி அன்பளிப்பு 1970
13 நா.பார்த்தசாரதி சமுதாய வீதி 1971
14 ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் 1972
15 ராஜம் கிருஷ்னன் வேருக்கு நீர் 1973
16 க.த.திருநாவுக்கரசு திருக்குறள் நீதி இலக்கியம் 1974
17 இரா.தண்டாயுதம் தற்காலத் தமிழ் இலக்கியம் 1975
18 இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல் 1977
19 வல்லிக்கண்ணன் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 1978
20 தி.ஜானகிராமன் சக்தி வைத்தியம் 1979
21 கண்ணதாசன் சேரமான் காதலி 1980
22 மா.இராமலிங்கம் புதிய உரைநடை 1981
23 பி.எஸ்.இராமையா மணிக்கொடி காலம் 1982
24 தொ.மு.சி.இரகுநாதன் பாரதி; காலமும் கருத்தும் 1983
25 லட்சுமி ஒரு காவேரியைப் போல 1984
26 அ.ச.ஞானசம்பந்தன் கம்பன் புதிய பார்வை 1985
27 க.நா.சுப்பிரமணியம் இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் 1986
28 ஆதவன் முதலில் இரவு வரும் 1987
29 வா.செ.குழந்தைசாமி வாழும் வள்ளுவம் 1988
30 லா.ச.ராமாமிர்தம் சிந்தாந்தி 1989
31 சு.சமுத்திரம் வேரில் பழுத்த பலா 1990
32 கி.ராஜநாராயணன் கோபல்லபுரத்து மக்கள் 1991
33 கோ.வி.மணிசேகரன் குற்றாலக் குறிஞ்சி 1992
34 எம்.வி.வெங்கட்ராம் காதுகள் 1993
35 பொன்னீலன் புதிய தரிசனங்கள் 1994
36 பிரபஞ்சன் வானம் வசப்படும் 1995
37 அசோகமித்திரன் அப்பாவின் சினேகிதர் 1996
38 தோப்பில் முகமது மீரான் சாய்வு நாற்காலி 1997
39 சா.கந்தசாமி விசாரணைக் கமிஷன் 1998
40 அப்துல் ரகுமான் ஆலாபனை 1999
41 தி.க.சிவசங்கரன் விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் 2000
42 சு.செல்லப்பா சுதந்திர தாகம் 2001
43 சிற்பி ஒரு கிராமத்து நதி 2002
44 வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் 2003
45 ஈரோடு தமிழன்பன் வணக்கம் வள்ளுவ 2004
46 திலகவதி கல்மரம் 2005
47 மு.மேத்தா ஆகாயத்திற்கு அடுத்த வீடு 2006




நாட்டுமையாக்கப்பட்ட நூல்களின் விபரங்கள்

வ.எண் நூலாசிரியரின் பெயர் ஆண்டு ரூபாய்
1 சுப்பிரமணிய பாரதியார் ------- -------
2 ம.பொ.சிவஞானம் 1984 1 இலட்சம்
3 பாரதிதாசன் 1990 10 இலட்சம்
4 பேரறிஞர் அண்ணா 1995 75 இலட்சம்
5 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1995 10 இலட்சம்
6 தேவநேயப் பாவாணர் 1996 20 இலட்சம்
7 மறைமலையடிகள் 1997 30 இலட்சம்
8 திரு.வி.க. 1998 20 இலட்சம்
9 கல்கி 1998 20 இலட்சம்
10 கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை 1998 5 இலட்சம்
11 ப.ஜீவானந்தம் 1998 5 இலட்சம்
12 வெ.இராமலிங்கம்பிள்ளை 1998 5 இலட்சம்
13 வ.உ.சிதம்பரனார் 1998 5 இலட்சம்
14 ஏ.எஸ்.கே.ஐயங்கார் 1998 -----
15 வ.இராமசாமி ஐயங்கார் 1998 -----
16 நாவலர் சோமசுந்தர பாரதியார் 1998 5 இலட்சம்
17 கவிஞர் கா.மு.ஷெரீப் 1998 5 இலட்சம்
18 பரலி சு.நெல்லையப்பர் 1998 5 இலட்சம்
19 வ.வே.சு.ஐயர் 1998 5 இலட்சம்
20 காரைக்குடி சா.கணேசன் 1998 5 இலட்சம்
21 ச.து.சு.யோகி 1998 5 இலட்சம்
22 வெ.சாமிநாதசர்மா 2000 5 இலட்சம்
23 கவிஞர் முடியரசன் 2000 10 இலட்சம்
24 மயிலை சீனி.வேங்கடசாமி 2000 10 இலட்சம்
25 சாமி.சிதம்பரனார் 2000 10 இலட்சம்
26 கா.அப்பாதுரையார் 2001 10 இலட்சம்
27 புதுமைபித்தன் 2002 5 இலட்சம்
28 கு.ப.சேது அம்மாள் 2002 5 இலட்சம்
29 ந.மு.வேங்கடசாமி நாட்டார் 2004 5 இலட்சம்
30 க.நா.சுப்பிரமணியம் 2004 5 இலட்சம்
31 ந.பிச்சமூர்த்தி 2004 5 இலட்சம்
32 தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் 2005 5 இலட்சம்
33 த.நா.குமாரசாமி 2005 5 இலட்சம்
34 மாயூரம் வேதநாயகம் பிள்ளை 2005 5 இலட்சம்
35 சக்தி வை.கோவிந்தன் 2005 5 இலட்சம்
36 ம.பொ.சிவஞானம் 2006 10 இலட்சம்
37 புலவர் குழந்தை 2006 10 இலட்சம்