சனி, 27 நவம்பர், 2010

கோழிப் பாம்பு

கோழிப்பாம்பு என்ற குக்குடசர்ப்பம் குறித்த செய்திகள் சீவகசிந்தாமணி, மேருமந்திர புராணம், ஸ்ரீபுராணம் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. பாம்புக்கு ஆயுள் நீளுமானால் அதன் உடல் குறுகி கோழி பறக்கும் தூரம் பறக்கும் ஆற்றல் அடையும் என்பதும் இதற்குக் கோழிப்பாம்பு என்பது பெயர் என்பதும் விளங்குகிறது.


மைசூரில் தொட்டபெட்டா மலையின் மேல் பாகுபலி என்ற முனிவரின் உருவம் ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வுருவத்திற்கு அருகில் கோழிப்பாம்பின் உருவம் ஒன்று கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வுருவத்தின் தலையும் கழுத்தும் பாம்பின் உருவமாகவும் உடம்பும் காலும் கோழியின் உருவமாகவும் அமைந்திருக்கின்றன. (காண்க: செந்தமிழ்செல்வி, சிலம்பு 24, பரல் 11)

உதிரப்பட்டி - இரத்தகாணி - நெய்த்தோர் பட்டி

தன் அரசனுக்காக இரத்தம் சிந்திப் போராடி வெற்றி பெற்றவர்களுக்கும் தமக்காக உயிர் நீத்தவர்களுக்கும் அரசன் அவ் வீரர்களது வீரத்தைப் பாராட்டி நிலம் தானம் கொடுப்பது வழக்கம். அத்தகைய நிலங்களுக்கு இரத்தகாணி, உதிரப்பட்டி, நெய்த்தோர் பட்டி என்று பெயர்.



போர்க்களத்தில் பிறருக்காக உயிரைக் கொடுத்தவர்களுக்கு மட்டுமின்றி போரில் இறக்காமல் தனிப்பட்ட முறையில் பிறருக்காகவோ அல்லது பிறர் தொந்தரவு போருக்க முடியாமலோ உயிர் நீத்தவர்களுக்கும் உதிரப்பட்டி என்ற நிலம் தானம் வழங்கப்பட்டுள்ளது.


நெய்த்தோர்பட்டிகை என்று பெருங்கதை கூறுகிறது. நெய்த்தோர் என்றால் இரத்தம் அல்லது உதிரம் என்றும் பட்டிகை என்றால் பத்திரிக்கை என்பதை விட பட்டி என்றும் பொருள் கொள்ளலாம். நெய்த்தோர் பட்டிகை என்று பெருங்கதை கூறுவதை சாசனங்கள் உதிரப்பட்டி என்றும் இரத்தகாணி என்றும் கூறுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பியம் என்ற ஊரில் உதிரப்பட்டி என்ற பெயரில் நிலப்பகுதி இன்றும் இருப்பதாக தி. வை. சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.


இதனை நன்கு விளக்கமாக மயிலை சீனி வேங்கடசாமி தமது உதிரப்பட்டி அல்லது இரத்தகாணி என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (காண்க: செந்தமிழ்செல்வி, சிலம்பு 22, பரல் 10. )

திங்கள், 15 நவம்பர், 2010

சிலப்பதிகார 'வரிகள்' - 2

சிலப்பதிகார 'வரிகள்' - 2
தேர்ச்சி வரி:
தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில், பிரிவினால் உண்டாகும் துயர் மிகுதியை, அவளது சுற்றத்தாரிடம் தலைவி கூறிக் கூறி வருந்துவது.

காட்சி வரி:
தலைவன் பிரிவால் உண்டான துயர மிகுதியைக் காதலி பித்துப் பிடித்தவளைப் போல், கண்ணில் படுபவர்களிடம் பண்ணிப் பண்ணிக் கூறுதலாகிய நடிப்பு.

எடுத்துக் கோள் வரி:
பிரிவின்கண் துயருறும் காதலி கையறு நிலையினளாய் மயங்கி விழுதலும், அருகிருந்த சேடியர் அவளைத் தூக்கி எடுத்து மயக்கம் தெளிவிப்பதும்.

இங்ஙனம் சிலப்பதிகாரத்தில் பல தரப்பட்ட 'வரிகள்' இடம் பெற்றுள்ளன. இவற்றின் மூலம் மாதவி தன நடிப்புத் திறத்தால் கோவலனைப் பலவாறாக மகிழ்வித்துத் தன்னிடம் தக்க வைத்துக் கொண்டாள். ஆயினும் கூட, விதி அவர்களைப் பிருத்து வேடிக்கைப் பார்த்தது.

சிலப்பதிகார 'வரிகள்' - 1

சிலப்பதிகார 'வரிகள்' - 1

கண்கூடு வரி:
தான் நயந்து ஏற்ற தலைமகன் கோவலனோடு அவள் வாழ்ந்த மனை வாழ்வில் அவனால் தனக்கொரு நலம் என்ற எண்ணத்தின் எண்ணமும் இல்லாமல் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் அவனை மகிழ்விப்பதே தனக்கொரு புருஷார்த்தம் என்று கொண்டு அவள் வாழ்ந்தது.

உள்வரி:
தனது உருவத்தை மறைத்து வேறொரு பெண்போல் வேடம் புனைந்து தோற்றம் அளிக்கும் விளையாட்டு. ஊடிப்பிரிந்து தலைவன் உற்ற துன்பத்தை அகற்றி மாதவி நடித்த நடிப்புத் தொழில்.


புறவரி: 
 அணிந்து மகிழ விழையும் காதலனை நெருங்காமல் விலகிச் சென்று அவனது வேட்கையை மிகுவிக்கும் விளையாட்டு.

கிளர்வரி:
ஊடிப்பிரிந்து காதலனைச் சேர்த்து வைக்கச் சிலதியர் அவர்களுக்கு இடை நின்று முயல்வதும், அப்பொழுது காதலி, அணைய விழையும் காதலனின் மொழியில் அவன் கருதாத குறிப்பைக் கற்பித்துக் கொண்டு ஊடி அகல்வது.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சிலப்பதிகார 'வரிகள்'


சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள சில (௯) வரிகள் பற்றி எழுதுவதாக முன்பு குறிப்பிட்டிருந்தேன். அவை பற்றி இப்பொழுது எழுதுகிறேன்.


காண் வரி: தலைமகன் விரும்பிய பொழுது தாழாமல் வந்து அவனை மகிழ்விப்பதும் அவன் போவெனப் பணித்த பொழுது அவ்விடம் விட்டு அகல்வதால் அவனை மகிழ்விப்பதுமகிய ஒரு கலை ஒழுக்கம்.

சிலப்பதிகார 'வரிகள்'

சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 'வரிகள்':
௧) காண் வரி
௨) கண்கூடு வரி
௩) உள்வரி
௪) புற வரி
௫) கிளர் வரி
௬) தேர்ச்சி வரி
௭) காட்சி வரி
௮) எடுத்து கோள் வரி
௯) கானல் வரி

இவை பற்றி விரைவில் எழுதுவேன்.

செம்மொழி



















செம்மொழி

உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.
மொழிகள் எண்ணிக்கை உலக அளவிலும் நம் நாட்டளவிலும் கூடுதலாக இருக்க ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கொண்டது இந்த உலகம் என்பதே. மேற்காணும் ஆராயிரத்து எழுநூற்று அறுபது மொழிகளுக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் உண்டு. அம்மூலமொழிக்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்களின், பல பண்பாடுகளின், பல திணை நிலங்களின் சங்கமம்.
திராவிட மொழிகளுக்கென்று குடும்பம் உண்டு. ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளின் மூல மொழிகளுடைய எண்ணிக்கையை ஆய்ந்தால் சில நூறு மொழிகள் பட்டியலிடப்படலாம். அது போன்ற பட்டியலில் இரு பிரிவுகள் காணப்படும்.
1.இயற்கை மொழி மனித இனத் தொடக்கத்தின் ஊடாகவே இணைந்து வளரும் மொழி இயற்கை மொழி.
2.செயற்கை மொழிஒரு இனக் கூட்டத்தாரிடம் இருந்து பிரிந்து புதியதொரு இனக் கூட்டமாக பல்கிப் பெருகும் சமூகம் இயற்கை மொழிக் கூறுகளின் அடிப்படையுடன் புதிதாகக் குடியேறிய சூழலுக்கு ஏற்றவாறு புதிய ஒலிக்குறிகளை தங்கள் மூதாதையர்களின் மூல மொழியுடன் கலந்து பேசும் போது பிறப்பவை செயற்கை மொழி.
இவ்வாறு தான் இன்று நூற்றுக்கணக்கான (மூல மொழிகளிலிருந்து) இயற்கை மொழிகளிலிருந்து கிளைத்து செயற்கை மொழித் தகுதியுடன் இருப்பவை பல்லாயிரம் மொழிகளாகும். திராவிட இயற்கை மொழிக் குடும்பமும் அவற்றில் ஒன்று. உலகின் தொன்மையான மொழிக் குடும்பம் என்ற பெருமையும் இவற்றிற்கு உண்டு.
திராவிட மொழிக் குடும்பத்தில் தாயாக இருப்பது தமிழ் மொழி. திராவிட மொழிக் குடும்பத்திலுள்ள மொழிகளின் எண்ணிக்கை 22. இதில் இலக்கியத் திறனுள்ள மொழிகள் இலக்கியத்திறன் இல்லா மொழிகள் என இருபிரிவுகள் உள்ளன.
பாகிஸ்தானிலுள்ள பலூசிஸ்தான் தொடங்கி மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி திராவிட இன மக்கள், தென்னிந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம், கேரள எல்லைகள் மற்றும் மலைகளின் மீது வாழும் பழங்குடி இன திராவிடர்கள். தெற்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜீ தீவு, தென்னாப்பிரிக்கா, இலங்கை (ஈழம்) எனப் பல்வேறு பகுதிகளில் திராவிட இன மொழிக் குடும்ப மக்கள் வாழ்கின்றனர்.
திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்பவை இலக்கியத் திறன் பெற்றவை. இலக்கியத் திறன் இன்றி பேச்சு வழக்கில் பயன்பாட்டிலுள்ள திராவிடக் கிளை மொழிகள் கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி, முதலான மொழிகள் பலவும் வட மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் பேசப்படுகிறது.
தமிழகம், கன்னட நாடு, தெலுங்கு நாடு மற்றும் மலையாள நாடுகளில் உள்ள அடர்ந்த காடுகளிலும், மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியிலும் வாழ்ந்து வரும் பழங்குடி திராவிடர்கள் தோட, கோத், படக, கேடகு, துளு முதலான தமிழின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர். இவற்றில் துளு மொழிக்கு தற்போது வரிவடிவமும் இலக்கியங்கள் படைப்பாக்கமும் தொடங்கியுள்ளது.
இவ்வாறு திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழியான தமிழ் தோன்றி நின்று நிலைபெற்று செழிந்திருப்பதால் செம்மொழி எனும் தகுதி வழங்கியுள்ளனர். ஏற்கெனவே சீனம், ஹீப்ரு, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை இத் தகுதியைப் பெற்றுள்ளன. இந்தியாவில் செம்மொழியாக சமஸ்கிருதம் உள்ளது. இந்த வரிசையில் தற்போது தமிழும் இணைந்துள்ளது.
உலகில் உள்ள பல கண்டங்களில் ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செம்மொழிகள் இருக்கும் பெருமை இந்தியாவை மட்டுமே சாரும். அந்த வகையில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் தங்கள் தொன்மையால் உலக மொழிகளுக்கு முன்னோடியாய் விளங்குகின்ற்ன.
ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது.
தகுதிகள்செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை :
1. தொன்மை2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை5. தாய்மைப் பண்பு 6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு 7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை8. இலக்கிய வளம் 9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தனித்தன்மை 11. மொழிக் கோட்பாடு
1. தொன்மை
செம்மொழி நிலைக்கு ஒரு மொழி ஆயிரம் ஆண்டுக்கால தொன்மை படைத்ததாக விளங்க வேண்டும். தமிழோ ஆயிரமல்ல ஈராயிரம் ஆண்டிற்கும் மேலாகப் பேசி, எழுதி, படைத்து தனக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டது. இதனை எவராலும் மறுக்கப்படாமல் ஏற்கத்தக்க அளவிற்கு இதன் தொன்மை சிறப்பானது. அத்துடனில்லாமல் இன்றளவும் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், படைப்பு புனைதலில் புதிய புதிய துறைகளிலும் நிகரற்று விளங்குவது அதன் தனிச் சிறப்பு.
2. தனித் தன்மை
பல்வேறு திணை நிலங்களிலும் திராவிட குடும்ப மொழிகள் கிளைத்திட வைத்த தமிழ், தாயாக விளங்கி தனக்கென ஒரு மொழிக் குடும்பத்தை உருவாக்கி தன்னைச் சுற்றி வேர்களாகவும், விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன் நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.
3. பொதுமைப் பண்பு
உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்பு கொண்டது தமிழ் மொழி. தமிழின் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் திராவிட மொழிக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.
4. நடு நிலைமை
தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குவது.
5. தாய்மைத் தன்மை
தமிழ் எனும் மூல மொழி தான் மட்டுமே என்ற தன்னலமின்றி தாய்மைப் பண்புடன் திராவிட மொழிக் குடும்பம் உருவாகிட அடிப்படையில் விளங்கியது. பேச்சு மொழியென்றும், இலக்கிய வளமிக்க மொழிகளென்றும், பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விட சிறப்பானது.
6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு
தமிழின் உன்னதமே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும், புறத்திணைக் கோட்பாடும் இலக்கியப் படைப்பாளர்களான முன்னோர்களின் பண்பாட்டுக் கலையறிவின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளமே தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுப் புலன் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.
7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை
உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன் குறைவால் பிறமொழிகளின் கூறுகளை சில துறைகளில் தாங்கி நிற்கின்றன.
வினைகளால் ஒரு புதிய துறை சார்ந்த சொற்களை தமிழில் எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது தமிழ். ஆகையினால் கடந்த காலமாயினும் சரி நிகழ்காலமாயினும் சரி எதிர்காலமாயினும் சரி எக்காலத்திலும் சமூகப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கண செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை, துறைகளை உருவாக்குதல் எளிது.
காட்டாக, கம்ப்யூட்டர் எனும் 20ஆம் நூற்றாண்டு சாதனம். உலகெங்கும் பல துறைகளில் பரவியது போன்றே தமிழ் நிலத்திலும் காலூன்றியது. பிறமொழிகள் அதில் வழங்கும் துறை சார்ந்த சொற்களை நேரடியாகப் பயன்படுத்தும் நிலையில் தமிழில் அதனை பொருளுணர்ந்து கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனிந்தன்மை விளங்கிக் கொள்ளத்தக்கது.
8. இலக்கிய வளம்
தமிழர் தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாக தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, சமூக, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.
சங்க காலத்திலிருந்து தொடங்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு காலம் தோறும் அந்தந்த சூழல்களுக்கேற்ப அரசன், தலைவன், தெய்வம், அற வாழ்க்கை, அக வாழ்க்கை, புற வாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் என்பன போன்றவற்றின் தாக்கம் எப்போதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் அது தொடர்பான இலக்கியங்கள் படைக்கப்பட்டன. எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை பொதுமைப் பண்புடன் துலங்கும் வகையில் இலக்கணக் கட்டமைப்புடன் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளது.
தமிழிலக்கியத்தின் சிறப்பு : பொதுவில் இத்தகைய இலக்கியப் படைப்புகள் தனிநபர், தன்னார்வக்குழு, அரசு நிறுவனம் எனும் மூன்று தளங்களில் உருவாக்கப்பட்டன. சிற்சில இலக்கியம் தனிப்புலவர்களால் உருவாக்கப்பட்டது. அதைப் போலவே கூட்டாக புலவர்கள் குழுக்களும் நூல்களைப் படைத்துள்ளனர். இது போன்ற படைப்பிலக்கியப் பணிகளுக்கு கொடையாளர்களாக அரசர்கள், அரசாங்கம் விளங்கியுள்ளது. சில அரசர்களே புலமைமிக்கவர்களாக விளங்கி இருந்தமையால் நேரடி இலக்கியப் படைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான சங்க இலக்கிய நூல்கள் புலவர்கள் அமர்ந்த பெரும் குழுவால் உருவாக்கப்பட்டு அவைகளை பிரிதொரு புலவர் குழு அந்த இலக்கிய திறனை அதன் மொழியமைப்பை ஆய்வு செய்வர். பிறிதொரு புலவர் குழு. அப்படைப்பு எக்காலமும் தமிழர்களுக்குப் பொதுவில் பயன்பட வேண்டும் எனும் உயரிய சிந்தனையால் அதன் இலக்கணக் கட்டமைப்பை ஆய்ந்திடுவர். இவ்வாறு ஒரு படைப்பு ஆய்வுக்குப்பின்னரே மக்களை அடைந்ததால் மொழிப் பயன்பாடு, பொதுமைப்பணபாடு தமிழரிடம் மிகுந்திருந்தது. தமிழ் இலக்கிய நூல்களில் கற்பனை நயத்தை விட இயைபுறு நோக்கு அதிகமிருக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வியல் பண்பாட்டை தமிழர்கள் கொண்டிருந்ததால் அது இலக்கியப் படைப்புகளிலும் எதிரொலித்தன.தமிழ் இலக்கியப் படைப்புகள் சங்க காலம் தொடங்கி 16ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே படைப்புகள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. பின்னர் ஈழத்து ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களையொத்த புதினங்கள், சிறுகதைகள் கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடை பரிமாணம் பெற்றது. செய்யுள் நடைகளில் படைத்த இலக்கியங்களில் இலக்கணக் கட்டமைப்புடன் பல்வேறு சிற்றிலக்கியங்களும், காப்பியங்களும் விரவியுள்ளன. இவற்றில் தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் எனச் செய்யுள் வடிவ இலக்கியத்துள் உறுப்புகளாக விளங்குகிறது. இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை, அய்க்கூ எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்படுகிறது.
தமிழ் தன் இலக்கியச் செல்வங்களால் இயைபுறு, கற்பனை இலக்கியத்துடன் நில்லாமல் தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் நூல்கள் படைப்பாக்கத்திற்கும் உட்பட்டுள்ளது. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள் வளமும் தமிழில் சிறப்புடன் விளங்குவதால் உலக இயற்கை மொழிகளின் இலக்கிய தளத்தில் தமிழுக்கென தனித்துவமான இடமுள்ளது.
9. உயர் சிந்தனை
இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் சமூகத்திற்கு பயன் விளைவிப்பதாக விளங்குதலே. இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் தொகுப்பாகவே மிளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபாகும். உயர் சிந்தனை மரபுகள் இலக்கியத்தில் நிலை பெற்றிட வேண்டி இலக்கண நெறிகள் பிழையுற பின்பற்றப்பட்டன. தனிமனிதர் தொடங்கி சமூகம், அரசு என்ற மூன்று நிலைகளிலும் கோட்பாடுகளை, வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ள உயர்ந்த சிந்தனை மரபு உலக சிந்தனை மரபிலிருந்து உயர்ந்தோங்கியவை என்பது மறுக்கவியலாது.
10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு
தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாயினும், புலவர்கள் குழு படைத்து, தொகுத்த பாடலாயினும் அரசர்கள் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் இழையோடும் கலை நயமும், கவி நயமும் போற்றத்தக்கவை.
ஏழைப்புலவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பனிக்காலம் என்பதால் மேலாடை இல்லா கவிஞர் குளிர்தாங்காமல் ஊர் புறத்தே இருந்த குட்டிச் சுவருக்கருகில் நடு நடுங்கி இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை கவிபுனையத் தொடங்கியது. அவர் கவிதையை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்குத் தாமே பொறுப்பேற்ற அவ்வூர் அரசன் குட்டிச் சுவரருகே ஒரு கவிதை ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டனன்.
"நாராய் நாராய் செங்கால் நாராய்பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னபவளக் கூர்வாய் செங்கால் நாராய்நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடிவட திசைக்கு ஏகு வீராயின்எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கிநனைசுவர்க் கூறைகளை குரற் பல்லிபாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டுஎங்கோன் மாறன் வழுதி கூடலில்ஆடையின்றி வாடையின் மெலிந்துகையது கொண்டு மெய்யது பொத்திக்காலது கொண்டு மேலே தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்ஏழையாளனைக் கண்டனும் எனுமே"
என்று பாடினார் சத்திமுத்தப் புலவர். பாடி முடித்ததும் மறைவிலிருந்த அரசன் அவரறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரை பணிந்து இப்புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.
தமிழகத்தை ஆண்ட பல அரசர்களும் சிறந்த புலமையுடையோர். இயற்கையோடு இணைந்த வாழ்வில் ஊறித் திளைப்பவர்கள். அதனால் அவர்கள் நாட்டு நலத்துடனேயே தங்களின் புலமை வளர்க்கும் திறத்தால் அறிவு சார் புலவர் பெருமக்கள் எப்போதும் அரசவையில் சூழ்ந்திருக்குமாறு வாழ்ந்தனர். இது போன்ற அவைக்களத்தில்தான் கருத்துப் பரிமாற்றம், புதிய பொருட்களை பற்றிய ஆய்வு, இலக்கியம் படைத்தல் போன்ற தமிழ்ப் பணிகள் நடந்தது. மேற்காணும் அரசனும் அத்தகையவனே. நாரையின் கூர்மையான நீள மூக்கிற்கு இயற்கையான எடுத்துக்காட்டை அறிய பல புலவர்களையும், நூல்களையும் ஆய்வு செய்தும் சரியான விடை தெரியாத நிலையில் அரசனின் ஐயத்தையும் போக்கி, தன் நிலையையும் தன் மனைவியின் பிரிவாற்றாமையையும் நயம்படக் கூறிப் பாடிய செய்யுள்.
ஒரு புலவனின் புலமை அவன் வறுமை. அரசனின் ஐயம் என்பவற்றை மட்டும் கொண்டதல்ல. அந்நாளில் ஆள்வோரும், புனைவோரும் இயற்கையோடு இணைந்த இயல்பு வாழ்க்கையில் திளைத்தனர். அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் விளங்கியுள்ளது. வாழ்வதற்கேற்ற நிலம், காலம் அமையப் பெற்றதால் அன்பு தழைக்கும் அமைதி வாழ்வை கொண்டிருந்தனர். அதனால் அவர்களின் சிந்தனை எச்சூழலிலும் இயற்கை வயப்பட்டதாகவே விளங்கியுள்ளது. இந்த பண்பே பொதுமையாக இக்கால இலக்கியங்களிலும் வெளிப்பாடாக விளங்குகிறது.
11. மொழிக்கோட்பாடு
உலகில் சில இனங்களின் அடையாளமாக மொழி காணப்படுகிறது. அந்த மொழியில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளும், மொழியின் பயன்பாடும், அதன் பொதுமைப்பண்புகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மொழியானது தனக்குள் உரியவாறு கட்டமைப்பைக் கொண்டிருப்பதே அம் மொழியின் அடிப்படைக் கோட்பாடாகும். இந்த அரும்பண்புகள் தமிழுக்குண்டு.
மொழியியலார் ஒரு மொழியை மதிப்பிடுகையில் மொழியில் உருவான இலக்கியங்களை திறனாய்வு செய்வர். அதில் அம்மொழிக்குரிய இனம், அது வாழ்ந்த, வாழ்ந்துவரும் சூழல், காலம் எனும் மூன்றையும் நோக்குவர்.
ஏனெனில் ஒரு மொழியால் உருவான இலக்கியம் அச்சமூகத்தை மட்டுமே நமக்குத் தெரிவிப்பவை அல்ல. கூடவே அச்சமூகத்தை தொடர்ந்து வரும் மரபார்ந்த பண்பு நலன்கள் பலவற்றையும் தெரிவிக்கின்றன.
எனவே தான் முன்னோர்கள் தமிழ் மொழிகளின் படைப்புகள் சமுதாயத்தில் தாக்கத்தை உருவாக்கும் வல்லமை கொண்டது என்கிற காரணத்தால் இலக்கியங்கள் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் வழங்கும்போது பொருளமைதி குறித்த கோட்பாட்டை வகுத்தனர். இந்த கோட்பாட்டை நெறிபிறழாமல் விளங்க இலக்கணத்தை வகுத்தனர். அதனால் தான் தமிழ்மொழி தனக்குள்ளே இலக்கணம் என்கிற கட்டமைப்பை பெற்றுள்ளதால் தரமிக்க இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சங்ககாலம் முதல் ஓர் ஒழுங்கமைதியுடன் பேணப்பட்டுவருகிறது.
அத்துடன் வளர்ந்து வரும் புதிய துறைகள் எதுவென்றாலும் அதனையும் ஏற்று தனித்தன்மை மாறாமல் தூய தமிழ் சொற்களிலேயே அத்துறைகளை அறியும் வண்ணம் சீரிளமைத் திறனுடன் தமிழ் மொழி விளங்குகிறது. இத்திறனே அதன் கோட்பாடாகும்.இந்தப் பதினோரு தகுதிப்பாடுகளும் தமிழுக்கு மட்டுமே பொருந்துவனவாகும் என்பதுதான் தனிச் சிறப்பு சம்ஸ்கிருதத்துக்கு ஏழு தகுதிப்பாடுகளும், லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மட்டுமே பொருந்துகின்றன என்பது மொழியியலாளர் கணிப்பு.

நன்றி: கணியத்தமிழ் - கணியத்தமிழில் வெளிவந்த கட்டுரை தமிழ் நலம் விரும்பிகளின் நலன் கருதி அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது.

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் உளப்பூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வியாழன், 30 செப்டம்பர், 2010

எனக்குப் பிடித்த கவிதை


பெண்மை



அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
இயல்பாய் அமைந்தும் இன்பச் சொரூபமாய்த்
தாயாய் நின்று தரணியைத் தாங்கும்
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்
உடன் பிறப்பாகி உறுதுணை புரியும்
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்
அயலார் தமக்கும் அன்பே செய்யும்
நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்
சிநேகம் இன்றியும் சிரித்துப் பேசும்
காமம் இல்லாமலும் கொஞ்சிக் களிக்கும்
பெருமை மிக்கது பெண்ணியல் பாகும்
அந்தப் பெருமையை அறியா ஆடவர்
அன்புப் பேச்சை ஆசையென்று அயிர்த்து
சிரித்து விட்டதில் சிற்றின்பம் எண்ணி
களிப்பைக் காமமாய்க் கற்பனை செய்தே
அவமதிப் படைவதும் அடிக்கடி உண்டு
இப்படிப் பலபேர் ஏமாந்து போவதால்
பெண்மனம் என்பதைப் பிழைபடப் பேசிப்
புதிர் என்று சொல்வது புரியாத் தனமே
வஞ்சனை என்பர் வஞ்சகம் உடையோர்

- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

காவிரி-காவேரி


தமிழ் நாட்டின் புண்ணிய நதியாகக் காவிரி ஆறு தொன்றுதொட்டு கருதப்பட்டு வருகிறது. இந்த ஆறு காவேரி என்றும் காவிரி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இப்பெயர்களுள் எது சரியானது என்பது குறித்து மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வு செய்துள்ளார்.


முற்கால நூல்களில்; காவிரி என்ற பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாஞ்சிய புராணம், மணிமேகலை, அண்ணாமலையார் சதகம், குலோத்துங்கசோழன் உலா முதலிய நூல்களும் ஔவையார், தொண்டரடிப் பொடியாழ்வார் ஆகியோரும் காவிரி என்ற சொல்லைக் கையாள்கின்றனர் என்று கா.ம.வேங்கடராமையா எடுத்துக்காட்டுகிறார். ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டும் காவேரி, காவிரி என்ற இரண்டு சொற்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு சிலப்பதிகாரத்தின் இயற்றமிழ்ப் பகுதியில் காவிரி என்றும், இசைத்தமிழ்ப் பகுதியில் கானல் வரியில் மட்டும் காவேரி என்றும் கூறப்பட்டுள்ளது.

கலைக்களஞ்சியத்தில் காவிரி, காவேரி என்ற இரண்டு சொற்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது. காகத்தால் கவிழ்க்கப்பட்டு விரிந்து பெருகிய ஆறு என்பதால் காகவிரி என்று வழங்கிய பெயரே பின்னர் காவிரி என்று மருவியது என்றும், இந்திரனது நந்தவனம் (கா) செழிக்க விரிந்தமையால் காவிரி என்று பெயர் பெற்றது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கவேரன் மகளாக வாழ்ந்தமையால் காவேரி என்று அழைக்கப்பட்டாள். இவள் அகத்தியருக்கு மணம் முடிக்கப்பட்டாள்.

அகத்தியர் இவளது தெய்வத்தன்மையை உணர்ந்து கமண்டலத்தில் நீராக மாற்றினார். பிரமன் தவத்திற்கு இறங்கி திருமால் நெல்லி மரமாக தோன்றினார். அகத்தியரின் கமண்டலம் சூறைக் காற்றால் கவிழ்ந்து கமண்டல நீரான காவேரி ஓடியது. அது காவேரி ஆறாக மாறியது என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது. ஆனால் காவிரி, காவேரி என்ற இரண்டு பெயர்களில் எது சரி என்பது பற்றிய விளக்கம் கலைக்களஞ்சியத்தில் இல்லை.

இவ்வாறு இரண்டு வகையாக இந்த ஆறு இளங்கோ அடிகளால் சுட்டப்பட்டாலும் காவிரி என்பதுதான் சரியான சொல் வழக்கு. காவேரி என்பது பேச்சு வழக்கு என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார். பேச்சு வழக்கு சொல்லான காவேரி என்ற சொல்லை இளங்கோ அடிகள் பயன்படுத்த வேண்டியதன் இன்றியமையாமையை அவர், "வரிப்பாட்டுகளின் கடைசி சொற்கள் மூவைச் சீராக முடிகின்றன. அதனால் காவிரி என்னும் ஈரசை சொல்லைக் காவேரி என்று மூவசைச் சீராக அமைத்துள்ளார். அவ்விடத்தில் காவிரி என்னுஞ் சொல்லை யமைத்தால் ஈரசைச் சீராக்கித் தலை தட்டுப்பட்டுச் செய்யுளோசை குறையுமாகையால் இவ்வாறு மாற்றியமைத்தார்" என்று காரணம் காட்டி விளக்குகிறார்.

எனவே காவேரி என்ற சொல் பேச்சு வழக்கு என்பதும், காவிரி என்ற சொல் இலக்கிய வழக்கு என்பதும் மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வு மூலம் புலப்படுகின்றது.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

நவக்கிரக நந்தவனம்



தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பட்டீஸ்வரம் என்னும் தளம் உள்ளது. இத்தளத்தில் நவக்கிரக நந்தவனம் உள்ளது.
இராகு - மந்தாமரை
சனி - கருங்குவளை, நீலோற்பவம்
கேது - செவ்வல்லி
செவ்வாய் - செவ்வரளி
சூரியன் - செந்தாமரை
குரு - முல்லை
சந்திரன் - வெள்ளை அரளி
சுக்கிரன் - வெண்டாமரை
புதன் - வெண்காந்தள்
நவகிரகங்களை அந்தந்த மலர்களால் வழிபட்டால் இறை அருள் கைகூடும் என்பது நம்பிக்கை.

வியாழன், 14 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்துகள்

பொங்கல் பொங்கட்டும்
புதுமைகள் நிறையட்டும்

பாவங்கள் விலகட்டும்
புண்ணியங்கள் பெருகட்டும்

தீமைகள் ஒழியட்டும்
நன்மைகள் வளரட்டும்

நல்வாழ்த்துகளுடன்

பேராசிரியர் க.துரையரசன்
கும்பகோணம்