சனி, 17 செப்டம்பர், 2016

தமிழில் அற இலக்கியங்கள்

தமிழில் அற இலக்கியங்கள்
முனைவர் க.துரையரசன்
இணைப்பேராசிரயர்
தமிழ்த்துறை
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கும்பகோணம் – 612 002
தமிழ்நாடு
மின்னஞ்சல்: darasan2005@yahoo.com

தமிழ்மொழி இலக்கிய வளம் செறிந்தது. இன்புறுத்துவதும், அறிவுறுத்துவதும் இலக்கியங்களின் தலையாயப்பணி. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள்களும் இலக்கியங்களின் விழுமியங்கள். எனினும் சில இலக்கியங்கள் அறக்கருத்துகளை எடுத்துரைத்து மனித சமுதாயத்தை நன்னெறியில் செலுத்த முயன்றன. தமிழில் சங்கம் மருவிய காலத்தில்  அற இலக்கியங்கள் பெரிதும் தோன்றின. அந்நூல்களின் தொகுப்பைப் பதிணென் கீழ்க்கணக்கு என்பர்.
பதிணைன் கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் வெண்பா:
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைச் சொல் காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு
பதிணென் கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள்:
1.    திருக்குறள்
2.    நாலடியார்
3.    நான்மணிக்கடிகை
4.    இன்னா நாற்பது
5.    இனியவை நாற்பது
6.    திரிகடுகம்
7.    ஆசாரக்கோவை
8.    பழமொழி
9.    சிறுபஞ்சமூலம்
10. ஏலாதி
11. முதுமொழிக்காஞ்சி
12. கார் நாற்பது
13. ஐந்திணை எழுபது
14. ஐந்திணை ஐம்பது
15. திணைமொழி ஐம்பது
16. திணைமாலை நூற்றைம்பது
17. கைந்நிலை
18. களவழி நாற்பது
இவற்றுள்….       1 முதல் 11 வரை உள்ளவை அற நூல்கள்.
12 முதல் 17 வரை உள்ளவை அக நூல்கள்.
18 வது நூல் புற நூல்.
இத்தொகுப்பில் உள்ள நூலில் இடம் பெறத்தக்கது கைந்நிலையா? இன்னிலையா? என்பதில் மாறுபட்ட கருத்து உண்டு.
1. திருக்குறள்:  
தமிழில் உள்ள அற இலக்கியங்களில் தலைசிறந்தது.
எழுதியவர் - திருவள்ளுவர்.
பெற்றோர் - ஆதி பகவன்
காலம்  - கி.மு. முதல் நூற்றாண்டு என்பர்.
வேறுபெயர்கள்: உலகப்பொதுமறை
·         முப்பால்
·         உத்திரவேதம்
·         தெய்வநூல்
·          வாயுறை வாழ்த்து
·         பொய்யாமொழி
அமைப்பு: (மு.வ. அவர்களின் கருத்துப்படி)
Ø  வெண்பாவால் ஆனது.
Ø  1330 குறட்பாக்கள்
Ø  முதல் அடியில் நான்கு சீர்கள் அடுத்த அடியில் மூன்று சீர்கள் என மொத்தம் ஏழு சீர்கள்.
Ø  அறத்துப்பால்  – 38 அதிகாரங்கள் - 4 இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்.
Ø   பொருட்பால்                    – 70 அதிகாரங்கள் – 7 இயல்கள் – அரசியல்,  அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல்.
Ø   இன்பத்துப்பால்     - 25 அதிகாரங்கள் – 2 இயல்கள் – களவியல், கற்பியல்.
சிறப்புகள்:
v  கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்                                           (திருவள்ளுவமாலை)
v  அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்                                            (ஔவையார்)
v  வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு                              (பாரதியார்)
v  உலக இலக்கியங்களில் திருக்குறளைப் போல உயர்ந்த ஞானப் பொன் உரைக்கும் நூல் வேறு இல்லை                             (ஆல்பர்ட் சுவைட்சர்)
v  வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி                          (பெ.சுந்தரம்பிள்ளை)
v  வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே  (பாரதிதாசன்)
v  முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப்.
*   இந்நூல், தமிழின் முதலெழுத்தான அ – இல்  தொடங்கி இறுதி எழுத்தான  ன் – இல் முடிகிறது.


கர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு               (குறள் எண் 1)

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்                 (குறள் எண் 1330)
2. நாலடியார்:
      திருக்குறளுக்கு அடுத்த நிலையில் பாராட்டத்தக்கது.
நாலடி நானூறு, வேளாண் வேதம் என்றும் அழைப்பர்.
      எழுதியவர்கள் : சமண முனிவர்கள்.
      தொகுத்தவர்: பதுமனார்
      காலம்: கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தையது.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         400 பாடல்களைக் கொண்டது.
·         அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்.
சிறப்புகள்:
v  ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
v  பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்
v  நாலடி இரண்டடி கற்றவனிடத்து வாயடி கையடி செய்யாதே என்பது பழமொழி. நாலடி = நாலடியார்; இரண்டடி= திருக்குறள்
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      கல்வி கரையில கற்பவர் நாள்சில
*      ஒருவர் பொறை இருவர் நட்பு
*      கொடார் எனினும் உடையாரைப் பற்றி விடாஅர் உலகத்தவர்
3. நான்மணிக்கடிகை:
ஒவ்வொரு பாடலிலும் மணி போன்ற நான்கு கருத்துகள் உள்ளன.
எழுதியவர் – விளம்பிநாகனார்
காலம் – கி.பி. நான்காம் நூற்றாண்டு
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         104+2 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
சிறப்புகள்:
v  அறக்கருத்துகளைச் சங்கிலித் தொடர் போன்று கூறுகிறது.
v  திருக்குறளின் அறக்கருத்துகளைப் போன்று சிறந்த உலகியல் அறங்கள் இடம்பெற்றுள்ளன.
v  பாடல்கள் எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளன.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்
*      குளத்துக்கு அணி என்ப தாமரை
*      பெண்மை நலத்துக்கு அணி என்ப நாணம்
*      அவைக்குப் பாழ் மூத்தோரின்மை
*      வெல்வது வேண்டின் வெகுளி விடல்
*      ஈன்றாளின் என்னக் கடவுளும் இல்
4. இன்னா நாற்பது:
ஒவ்வொரு பாடலிலும் மக்களுக்குத் துன்பம் தரும் இன்னாதவை நான்கு இடம் பெற்றுள்ளன.
எழுதியவர் –கபிலர் (சங்கப் புலவரா? பிற்காலத்தவரா? என்ற ஐயம் உண்டு)
காலம் – கி.பி. நான்காம் நூற்றாண்டு
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         40+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
சிறப்புகள்:
v  திருக்குறள் கருத்துகள் நிரம்ப இடம் பெற்றுள்ளன.
v  எளிய சொல்லாட்சி
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா
*      நெடுநீர் புணையின்றி நீந்துதல் இன்னா
*      கடுமொழியாளர் தொடர்பு இன்னா
*      தடுமாறி வாழ்தல் உயிர்க்கு இன்னா
5. இனியவை நாற்பது:
இன்னா நாற்பது கூறும் கருத்துகளுக்கு எதிரான இனிய கருத்துகளைக்    கூறுகிறது.
மக்கள் நன்னெறியில் வாழ அவர்கள் கடைபிடிக்க வேண்டிவற்றைக் கூறுகிறது.
சில பாடல்களில் மட்டும் நான்கு இனியவை கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான பாடல்களில் மூன்று இனியவை கூறப்பட்டுள்ளது.
எழுதியவர்: பூதஞ்சேந்தனார்.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         40+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
சிறப்புகள்:
v  127 இனியவை கூறப்பட்டுள்ளன.
v  திருக்குறள் கருத்துகள் மிகுதியாக  இடம் பெற்றுள்ளன.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      குழவி தளர்நடை காண்டல் இனிது.
*      மழலை கேட்டல் அமிழ்தினும் இனிது.
*      ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை இனிது.
*      கற்றறிந்தான் கூறும் கருமப் பொருள் இனிது.
*      ஒளிபட வாழ்தல் இனிது
*      கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிது.
6. திரிகடுகம்
          சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருள்களால் ஆன மருந்துப்பொருள் திரிகடுகம். இது உடல் நோயைப் போக்கும்.
அது போல இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று கருத்துகள் மனநோயைப் போக்கும். ஆதலால் திரிகடுகம் என்பது காரணப் பெயராக அமைந்துள்ளது. 
இந்நூலை எழுதியவர்: நல்லாதனார்
காலம்: கி.பி. 5 ஆம் நூற்றாண்டு என்பர்.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         400+1 (கடவுள் வாழ்த்து) பாடல்களைக் கொண்டது.
சிறப்புகள்:
v  ஒவ்வொரு பாடலிலும் வாழ்விற்கு உறுதி பயக்கும் மும்மூன்று கருத்துகள் உள்ளன.
v  இல்வாழ்க்கை நெறிகள் மிகுதியாக காணப்படுகின்றன.
v  பெண்ணின் பெருமை மிகுதியாக கூறப்பட்டுள்ளன.
v  உலக மக்கள் சிறப்புற்று வாழ வழிவகை கூறுகின்றது.
v  மனிதர்கள் வாழ்க்கையில் தவிர்க்கப்பட வேண்டியவற்றைக் கூறுகின்றது.
v  வீடுபேறு அடைவதற்கான வழிகளைக் கூறுகின்றது.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      பெண்ணிற்கு அணிகலன் நாணுடைமை
*      மக்கள் பெறலின் மனைக் கிழத்தி
*      தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
*      வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
*      கோளாளன் என்பான் மறவாதான்
7. ஆசாரக் கோவை:
ஆசாராம் = ஒழுக்கம், தூய்மை, நன்மை, முறைமை, நன்னடத்தை, வழிபாடு, கட்டளை, வழக்கம்.
எழுதியவர்: பெருவாயில் முள்ளியார்
காலம்: கி.பி. 5ஆம் நூற்றாண்டு
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா ஆகியவற்றைக் கொண்டது.
·         100 பாடல்களைக் கொண்டது.
சிறப்புகள்:
v  உலகியல் ஒழுக்கங்கள் (ஆசாரங்கள்) கூறப்பட்டுள்ளன.
v  மக்கள் மேற்கொள்ளத்தக்கன; விலக்கத்தக்கன கூறப்பட்டுள்ளன.
v  உணவு உட்கொள்ளும் முறை
v  ஆடை அணியும் முறை
v  நீராடும் முறை
v  தூங்கும் முறை
முதலியன கூறப்பட்டுள்ளன. இவற்றுள் பெரிதும் இக்கால நடைமுறைக்கு ஒவ்வாதவனவாக உள்ளன.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      வைகறைத் (அதிகாலையில் அல்லது விடியற் காலையில்) துயிலெழ வேண்டும்
*      தாய், தந்தையை வணங்க வேண்டும்.
*      நல்லறத்தின் வழி பொருளீட்ட வேண்டும்.
8. பழமொழி:
            பழமையான மொழி. அனுபவசாலிகள் கூறும் மொழி.
படிப்பறிவினைக் காட்டிலும் பட்டறிவு மேலானது.
பழமொழி என்பது பட்டறிவின் வெளிப்பாடு.
பழமொழி நானூறு என்றும் பெயர்.
எழுதியவர்: முன்றுறையரையனார்.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         400 பாடல்கள்  (+தற்சிறப்புப் பாயிரம்)
·         முதல் இரண்டு அடிகளில் ஆசிரியர் தாம் கருதிய பொருளைக் கூறியுள்ளார்.
·         மூன்றாம் அடி  பெரிதும் ஆண்மக்களை விளித்துக் (ஆடூஉ முன்னிலை) கூறும்; சிறுபான்மை மகடூஉ முன்னிலையாய் இருக்கும்.
·         நான்காம் அடியில் பழமொழி இடம் பெற்றிருக்கும்.
·         இலக்கியப் பழமொழிகளே இடம் பெற்றுள்ளன.
சிறப்புகள்:
v  திருக்குறள், நாலடியார் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
v  சங்ககாலப் புலவர்கள், புரவலர்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
v  சேர, சோழ, பாண்டியர்கள் எனும் மூவேந்தர்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
v  புராண, இதிகாசக் கதைகள் காணப்படுகின்றன.
v  அக்காலத் தமிழர் பண்பாடுகளை உணர்த்துகிறது.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள் (பழமொழிகள்):
*      தன் கையே தனக்கு உதவி.
*      திங்களை நாய் குரைத்தற்று.
*      பாம்பறியும் பாம்பின் கால்.
*      ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்.
*      முள்ளினால் முள் களையுமாறு.
*      இறைத்தோறும் ஊறும் கிணறு.
9. சிறுபஞ்சமூலம்:
            கண்டங்கத்திரி,சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்களால் ஆன மருந்துப் பொருள் சிறுபஞ்சமூலம்.
            இம்மருந்துப் பொருள் உடல் நோயைத் தீர்க்கும். அதுபோல் இந்நூலில் உள்ள  ஒவ்வொரு பாடலிலும்  உள்ள  ஐந்து கருத்துகள் மன நோயைப் போக்கும். எனவே இந்நூலுக்கு சிறுபஞ்சமூலம் என்பது காரணப்பெயராயிற்று. 
ஆசிரியர்: காரியாசான், இவர் கணிமேதாவியாருடன் (ஏலாதி பாடியவர்) உடன் பயின்றவர் என்பர்.
காலம்: கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்பர்.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது
·         102 பாடல்கள் + கடவுள் வாழ்த்து
சிறப்புகள்:
v  சமணர்களுக்கான அறங்கள் கூறப்பட்டுள்ளன.
v  கூறப்பட்டுள்ள அறங்கள் பெரும்பான்மையும் எல்லாருக்கும் உரிய பொது அறங்களாக உள்ளன.
v  கொல்லாமை, புலால் உண்ணாமை பற்றிய அறங்கள் கூறப்பட்டுள்ளன.

குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      கற்புடைப் பெண்டிர் பற்றியவை 
*      ஆசிரியர்-மாணவர் பற்றியவை    
*      நோயின்றி வாழ்பவர் பற்றியவை
*      மேதை-பேதை பற்றியவை     
*      தோலாலானக் கன்றைக் காட்டிப் பசுவிடம் பால் கறக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததை இந்நூல் சுட்டுகிறது.
*      மயிர் வனப்பல்ல; மார்பு வனப்பல்ல; காது வனப்பல்ல; பல் வனப்பல்ல; சொல்லே (ஒருவன் பேசும் பேச்சே) வனப்பு. வனப்பு = அழகு.
10. ஏலாதி:
            ஏலம் + ஆதி = ஏலாதி. ஏலக்காயுடன் கீழ்க்கண்ட பொருள்களைச் சேர்த்து செய்யப்பட்டக் கூட்டு மருந்துதான் ஏலாதி.
1 பங்கு ஏலக்காய் + 2 பங்கு இலவங்கம் பட்டை + மூன்று பங்கு நாககேசுரம் + 4 பங்கு மிளகு +  5 பங்கு திப்பிலி + 6 பங்கு சுக்கு என்ற விகிதத்தில் ஏலாதி தயாரிக்கப்படது.
இம்மருந்துப் பொருள் உடல் நோயை நீக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும். அதுபோல் இப்பாடலில் உள்ள கருத்துகள் அறியாமை நீக்கும்; மெய்யுணர்வை அளிக்கும்.
ஆசிரியர்: கணிமேதாவியார். இவர் திணைமாலை நூற்றைம்பது என்ற நூலையும் எழுதியுள்ளார். சமண சமயத்தவர்.
அமைப்பு:
·         வெண்பாவால் ஆனது.
·         80 + 2 (கடவுள் வாழ்த்து, சிறப்புப் பாயிரம்) பாடல்கள் உள்ளன.
சிறப்புகள்:
v  அரசகுலப் பிறப்பு சிறப்புடையது
v  இல்லற வாழ்வு பெறற்கரியது.
v  சமணரான இவரின் இக்கருத்து சிந்திப்பதற்குரியது.
v  கொல்லாமை, புலால் உண்ணாமை பற்றிய அறங்கள்
-       குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      மன்னர்களுக்கு உரிய ஒழுக்கங்கள்
*      விண்ணுலக வாழ்வு பெறத்தக்கவர்கள்
*      அருளுடைமை பற்றிய கருத்துகள்
*      இனியவை கூறல் பற்றிய கருத்துகள்
*      பணிவுடைமை பற்றிய கருத்துகள்
*      நிறையுடைமை நீர்மை உடைமை
*      பொறையுடையவர், பொய்மை இல்லாதவர், புலால் உண்ணாதார், கொடைத்தன்மை உடையோர் -  பல உயிர்களுக்குத் தாய் போன்றவர்.
11. முதுமொழிக் காஞ்சி:
            சான்றோர்களின் அனுபவத் தொகுப்பாக உள்ளது.
            பழமொழியோடு தொடர்புடைய நூல்.
            மனித வாழ்வின் நிலையாமையைக் கூறுகின்றது.
            ஆசிரியர்: மதுரை கூடலூர் கிழார்.
அமைப்பு:
·         வெண்செந்துறை என்னும் பாவகை.
·         100 பாடல்கள் உள்ளன.
·         ஒவ்வொரு பாடலும் இரண்டு அடிகள் கொண்டது.
·         முதல் அடி ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்று தொடங்குகிறது.
·         பாடல்கள்  பத்து பிரிவுகளாக உள்ளன.
·         சிறந்தபத்து, அறிவுப்பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லப்பத்து, இல்லைப்பத்து, பொய்ப்பத்து, எளியப்பத்து, நல்கூர்ந்தபத்து, தண்டாப்பத்து.
·         ஒவ்வொரு பிரிவுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன.
சிறப்புகள்:
v  நிலையாமையைக் கூறுவது முக்கிய நோக்கமாயினும் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றையும் வலியுறுத்துகின்றது.
v  நூலின் அமைப்பு  பாராட்டத்தக்கது.
v  அனுபவ மொழிகளின் தொகுப்பு.
குறிப்பிடத்தக்கக் கருத்துகள்:
*      கற்றலின் கேட்டல் நன்று
*      ஈரம் இல்லாதது கிளை நட்பன்று
*      துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது
*      மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று
*      நரையில் பெரியதோர் நல்குரவில்லை
*      இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை