ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஆய்வுச் சுருக்கம்

என் மேற்பார்வையில் தமிழ் வளர்ச்சியில் தற்கால மேடைப்பேச்சு என்னும் தலைப்பில்   திரு.பெ.கலியமூர்த்தி    முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவர் தமது ஆய்வுச் சுருக்கத்தை 04-11-2017 அன்று நடைபெற்ற முனைவர் பட்ட முன்வாய்மொழித் தேர்வில் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் முன்னிலையில் அளித்தார்.
ஆய்வாளர் ஆய்வுச்சுருக்கம் வழங்குதல்


ஆய்வுச்சுருக்கத்தைத் தொடங்கி வைத்தல்

வல்லூநர்க்குழு உறுப்பினர் இ.ஆர்.ரவிச்சந்திரன்

வெள்ளி, 27 அக்டோபர், 2017

வ.சுப. மாணிக்கனார்

வ.சுப.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா - கருத்தரங்கம் மன்னன்பந்தல் அன்பநாதபுரம் வகையார் கல்லூரி (ஏவிசி) தமிழ்த்துறையில் (26-28.10.2017) நடைபெற்றது. இக்கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வில் (27.10.2017) நான் அமர்வுத்தலைவராகப் பங்கேற்றேன். கருத்தரங்க நினைவாக வ.சுப. மாணிக்கனார்  பற்றி சில குறிப்புகள்:
  • தோற்றம்               : 17.04.1917
  • பெற்றோர்             : அ.சுப்பையா செட்டியார் - தெய்வானை ஆச்சி
  • இயற்பெயர்          : அண்ணாமலை 
  •  மனைவி               : ஏகம்மை ஆச்சி
  • மகன்கள்                : மூவர் -  1. தொல்காப்பியன்   2. பூங்குன்றன்  3. பாரி
  • மகள்கள்                 : இருவர்  - 1.  தென்றல்   2. பொற்கொடி
  • இறப்பு                      : 25.04.1989 (72 ஆம் அகவையில்) 
  • துயரம்                     : 6 வயதில் தாய் இறப்பு, 7 வயதில் தந்தை இறப்பு
  • தாத்தா-பாட்டி (தாய்வழி) : அண்ணாமலை செட்டியார், மீனாட்சி ஆச்சி இவர்கள் வளர்ப்பில் வாழ்தல்
  • பொய்சொல்லா மாணிக்கம்: 11வயதில் பர்மாவில் உள்ள ரங்கூனில் வட்டிக்கடையில் வேலைக்குச் சேர்தல் - அக்கடையின் முதலாளி,  தன்னைத்தேடி ஒருவர் வருவார்.  அவரிடம் தான்  இல்லை என்று பொய் சொல்லக்கூறுதல் - இவர் உடன்படாமை -  அதனால் வேலையிழப்பு - ஊருக்குத் திரும்புதல் 
  • வித்துவான்: பர்மாவிலிருந்து திரும்பிய பிறகு பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் வழிகாட்டுதலின்படி அண்ணாமலைப் பல்கலையில் வித்துவான் பட்டம் (1936-40)
  • பி.ஓ.எல்: சென்னைப் பல்கலைக்கழகம் (1945)
  • எம்.ஓ.எல். - செ.ப.க. (1946)
  • எம்.ஏ. - செ.ப.க. (1951) - தமிழில் வினைச்சொற்கள்
  • முனைவர் பட்டம்: செ.ப.க. (1957) - தமிழில் அகத்திணைக் கொள்கைகள்
  • பணிகள்: விரிவுரையாளர் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1941 - 48
      • பேராசிரியர் - காரைக்குடி அழகப்பா கல்லூரி - 1948 - 64
      • முதல்வர் - காரைக்குடி அழகப்பா கல்லூரி - 1964 - 70
      • தமிழ்த்துறைத் தலைவர் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1970 - 77
      • துணைவேந்தர் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - 1979 -82 ( ஊருக்குச் செல்ல  மதுரைப் பேருந்து நிலையம் வரை பல்கலைக்கழக மகிழ்வுந்தில் வந்து பிறகு பேருந்தில் செல்வார்)
  • பட்டங்கள்:
    •  செம்மல் - சன்மார்க்க சபை,
    •  மேலைச்சிவபுரி 1969 முதுபெரும்புலவர் - குன்றக்குடி ஆதீனம்
    •  D.Lit. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொன்விழா ஆண்டில் வழங்கப்பட்டது - 1963
    • திருவள்ளுவர் விருது - தமிழக அரசு - 1994 (இறப்புக்குப் பிறகு)
    • பெருந்தமிழ்க் காவலர் - ஈப்போ பாவாணர் சங்கம்
    • முதுபேராய்வாளர் - திராவிட மொழியியற் கழகம்
    • முது ஆராய்ச்சியாளர் - கேரளத் திராவிடமொழிக் கழகம்
    • மூதறிஞர்
    • தமிழ் இமயம்
  • பதவிகள்:
    • தமிழகப் புலவர் குழுத் தலைவர் 
    • பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர்
    • தமிழ்வழிக் கல்வி இயக்கம்
    • தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத்தலைவர்
    • தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்காப்பியத் தகைஞர்
  • நூல்கள்:32
  • குறிப்பிடத்தக்கவை: மனைவியின் உரிமை (1947), கொடை விளக்கு (1957), தமிழ்க்காதல் (1962), தமிழ்வழிக் கல்வியாக்கம் (1988)
  • சிறப்பு: ஆய்வு வன்மைக்கு: தமிழ்க்காதல், சிந்தனைத் தெளிவுக்கு: வள்ளுவம், புலமை நலத்திற்கு: கம்பர்.
  • தொல்காப்பியம் பயிலாதார் அறிவு குறைபாடு உடையது. 
  • சங்கப் பனுவலைக்கற்றால் கிழம் போம்; கீழ்மையும் போம். (மாணிக்கக் குறள் - 461)
  • குறிக்கோள் இலாத வாழ்வு கோடுகள் இலாத ஆட்டம் -நெறிக்கோள் இலாத நெஞ்சு நீறைநீர் அலாத ஆறு-மறிக்கோள் இலாத கல்வி வரப்புகள் இலாத நன்செய் - செறிக்கோள் இலாத மேனி திறவுகோல் இலாத பூட்டாம் (மாமலர்கள் - ப. 60) 
  •  பார்வை: www.tamilheritage.org/thfcms/   www.vspmanickam.com

AVC கல்லூரி, வ.சுப.கருத்தரங்கம்

மன்னன்பந்தலில் உள்ள அ.வ.கல்லூரியில் (AVC) கல்லூரி தமிழ்த்துறையின்  சார்பில் 26.10.2017 முதல் 28.10.2017 வரை மூன்று நாட்கள்  மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கின் இரண்டாம் நாள் (27.10.2017) நடைபெற்ற முதல் அமர்வில் நான் அமர்வுத் தலைவராகப் பங்கேற்றேன். 
கருத்தரங்கில் பங்கேற்றோர்

கருத்தரங்கில் பங்கேற்றோர்

கருத்தரங்கில் பங்கேற்றோர்

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு அவர்கள்
ஆய்வுக் கட்டுரை வழங்குதல்






வியாழன், 26 அக்டோபர், 2017

கருத்தரங்கம்



ஆய்வாளர் உரை



முதல்வர் உரை 

துறைத்தலைவர் உரை

துறைத்தலைவர் உரை
முதல்வர் தலைமை உரை
அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம். தமிழ்த்துறை 

இக்கல்வியாண்டில் எம்.ஃபில். பயிலும் மாணவர்களுக்கு வாரந்தோறும் புதன்கிழமை அன்று கருத்தரங்கம் நடத்தத் தொடங்கி உள்ளோம்.
இதன் முதல் நிகழ்வாக 25.10.2017 அன்று முற்பகல் 11.00 மணியளவில் கல்லூரி முதல்வர் (பொ.) பேரா.ச.சீத்தாராமன் அவர்கள் தலைமையேற்கவும் தொடக்க உரையை நான் நிகழ்த்தவும் கருத்தரங்கம் இனிதே தொடங்கப்பெற்றது. இதில் முதல் ஆய்வுக் கட்டுரையாக மாணவர் பாக்யராஜ் 'ஆய்வு அணுகுமுறைகள்' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினார். இந்த அரங்கத்திற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து முனைவர் ந.கிருஷ்ணவேணி அவர்கள் ஆய்வாளரையும் அரங்கையும் ஆற்றுப்படுத்தினார்கள். இதில் தமிழ்த்துறை ஆசிரியர்கள் மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாண-மாணவியர் பங்கேற்றனர்.

சனி, 7 அக்டோபர், 2017

இலக்கியமும் மனித வாழ்வும்

(கும்பகோணம் மத்திய சுழற்சங்கக் கூட்டத்தில் 02-10-2017 திங்கட்கிழமையன்று இரவு 8 மணியளவில் சுழற்சங்க சமுதாயக் கூடத்தில் நிகழ்த்திய உரை)

விருந்தோம்பலில் 
தன்னினத்தைக் 
கூவியழைக்கும்
காகம் போலிரு

எள்ளென்றாலும்
எட்டாகப் பகிர்ந்து உண்
சந்ததி தழைக்கும்

என்பது இக்காலக் கவிஞரின் உள்ள வெளிப்பாடு. 'விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு' என்பது மூத்தோர் வாக்கு.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்



தலைப்பைச் சேருங்கள்

கும்பகோணம் மத்திய சுழற்சங்கத்தில் உரை

02.10.2017 அன்று காந்தி ஜெயந்தி அன்று கும்பகோணம் மத்திய சுழற்சங்கக்கூட்டத்தில் இலக்கியமும் மனித வாழ்வும் என்ற தலைப்பில்
 உரையாற்றினேன்

பரிசளித்தபொழுது
மரகதலெட்சுமி பாத்திரக்கடை உரிமையாளர் திரு சிவசுப்பிரமணியன் அவர்கள் பரிசளித்துப் பாராட்டிய பொழுது


மருத்துவர் பழனிவேல் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பிதபொழுது
மருத்துவர் பழனிவேல் MBBS., DCH.  அவர்கள் பொன்னாடை
 அணிவித்து சிறப்பித்தபொழுது


சனி, 15 ஜூலை, 2017

சமூகப் பார்வையில் தமிழ்த் தனிப்பாடல்கள்

கும்பகோணத்தில் பொன்னி இலக்கியச் சுற்றம் இயங்கி வருகிறது. இதனை முன்னின்று நடத்தி வருபவர்கள் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.ஜே.பிலோமின்ராஜ், தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.மணி ஆகியோர் ஆவார்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஆக்கப்பூர்வமாகச் செயற்பட்டு வருபவர் அன்னைக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் செ.கணேசமூர்த்தி.

இதன் 19வது கூட்டம் இன்று (15.07.2017) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டு 'சமூகப் பார்வையில் தமிழ்த் தனிப்பாடல்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

யாருக்குப் பெண்ணைக் கொடுக்கலாம்?

யாருக்குப் பெண்ணைக் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்ற தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் கீழே தரப்படுகின்றன. இப்பாடலைப் பாடியவர் யார் எனத் தெரிந்திலது. (துரை தண்டபாணி அவர்கள் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு மார்ச்சு 2003)

பெண்ணை மணப்பதற்குத் தகுதி உடையவர்

புரைதபு குணனும் சீலமும் வனப்பும்
பூரண ஆயுளும் துப்பும்
கரையில்விற் பனமும் பாலனம் புரியும்
கருத்தரும் குறைவிலாது ஆக
விரவுசெல் வமுமாம் எண்வகை யுடைய
ஆடவர் விருப்புறு வண்ணம்
பரவிநின்று அவர்க்கு மகள்கொடை உதவல்
பருணிதர் கடமைய தாமால்

அருஞ்சொற்பொருள்
 புரைதபு - குற்றமற்ற நற்பண்பு
சீலம் - ஒழுக்கம்
வனப்பு - அழகு
துப்பு - ஆற்றல்
கரையில் - அளவில்லாத
விற்பனம் - கல்வி
பாலனம் புரியும் கருத்தர் - தன்னைச் சுற்றியுள்ளவரைக் காப்பவர்
குறைவிலாது - குற்றமில்லாமல்
விரவு - சேர்த்த
பருணிதர் - அறிவுடையோர்


யாருக்குப் பெண் கொடுக்கக் கூடாது?

முத்தியில் விருப்பம் உடையவன் மிடியன்
மூர்க்கன் சேண் தேயத்தில் உள்ளோன்
புத்தியில் வயிரம் பொருந்திய சூரன்
புதல்விதன் வயதின்மும் மடங்கு
தத்திய வயது ளோன்இனார் தமக்குத்
தரணியில் ஒருவரும் உள்ளம்
நந்திதன் மகளைத் தரத்தகாது என்றாக்
கணிதநூல் நவின்றிடு மன்னோ!

அருஞ்சொற்பொருள்
மிடியன் - வறியவன்
மூர்க்கன் - அரக்கக் குணமுடையவன்
சேண்தேயம் - அயல்நாடு 
வயிரம் - பழி வாங்கும் குணம்
தத்திய - அதிகமான
நந்தி - விரும்பி
கணிதநூல் - சோதிடநூல்
 

வெள்ளி, 3 மார்ச், 2017

03.03.2017இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையில் நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் பங்கேற்று நான் உரை நிகழ்த்தினேன். காட்சி விளக்கமாக எனது உரை அமைந்தது. அதன் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மாண்பமை துணைவேந்தர் அவர்கள் உரை நிகழ்த்தும்பொழுது
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் முனைவர் ஈஸ்வரன்(தேசியக்கல்லூரி, திருச்சி),  முனைவர் அன்பழகன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் தெய்வீகன் அவர்களுடன் மாண்பமை துணைவேந்தர் அவர்கள்




நிகழ்ச்சியில் பங்கேற்றோர்


நான் உரை நிகழ்த்தும்பொழுது

விரல் நுனியில் உலகம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் நான் 'விரல் நுனியில் உலகம்' என்னும் தலைப்பில் உரை வழங்கினேன். அதன் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

வியாழன், 2 மார்ச், 2017

தாயர் ஐவர்.....!!! தந்தையரும் ஐவர்...!!!

ஒருவருக்கு ஒரு தாய், ஒரு தந்தை இருப்பதுதான் இயற்கை நியதி. ஆனால் ஐந்து தாயாரும் ஐந்து தந்தையரும் இருக்க முடியுமா? இருக்கிறார்கள் என்கிறார் ஒரு புலவர். அவர் யார் எனத் தெரிந்திலது. (துரை தண்டபாணி அவர்கள் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு மார்ச்சு 2003)
தாயர் ஐவர்

தன்னை அளித்தாள் தமையன்மனை குருவின்
பன்னி அரசன் பயில்தேவி - தன்மனைவியைப்
பெற்றாள் இவரையே பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்.

தன்னைப் பெற்ற தாய், தமையன் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசி, தன் மாமியார் ஆகிய ஐவருமே ஒருவருக்குத் தாயர்தான் என்று ஔவையார் கூறியுள்ளார்.

தந்தையர் ஐவர்

பிறப்பித்தோன் வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்
சிறப்பின் உபதேசம் செய்தோன் - அறப்பெரிய 
பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் பயந்தீர்த்தோன்
எஞ்சாப் பிதாக்களென எண்.

பெற்ற தந்தை, வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவர், உபதேசம் செய்த ஆசான், பஞ்சத்தில் உணவளித்தவர், அச்சம் போக்கியவன் ஆகிய ஐவரும் ஒருவனுக்குத் தந்தையாவர்.

ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு, ஒரு பிள்ளைக்குப் பல தாயர் இருப்பதுண்டோ? என்னும் திரைப்படப் பாடல் எங்கிருந்தோ என் காதில் விழுகிறது. உங்கள் காதில் ஒலிக்கிறதா?

புதன், 1 மார்ச், 2017

அன்பிலாள் இட்ட அமுது

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாண்ஒக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்றது ஐயையோ
அன்பிலாள் இட்ட அமுது - ஔவையார் தனிப்பாடல்

அன்பில்லாத மனைவி மட்டுமல்ல அன்பில்லாதவர்கள் - நம்மை மதிக்காதவர்கள் - வந்த விருந்தினரை மனமார உபசரிக்காதவர்கள் என யாராக இருந்தாலும் உள்ளன்போடு பரிமாறாத உணவை யாரும் உண்ணக் கூடாது. 

அத்தகைய உள்ளன்பு இல்லாத ஒருவர் பரிமாறிய உணவைக் கண்டு அஞ்சி ஔவையார் கூறுவது போன்று மேற்கண்ட பாடல் அமைந்துள்ளது.

இப்பாடலின் பொருள் இதுதான்:
அன்பில்லாதவர் படைத்த உணவைப் பார்ப்பதற்குக் கண் கூசுகின்றது; அவ்வுணவை எடுத்த உண்ண கை கூசுகிறது; ஒருவாறு கையால் எடுத்து வாயில் வைக்க முயன்றால் வாய்திறக்க மறுக்கிறது; அவ்வுணவைப் பார்க்கப் பார்க்க என் உடம்பெல்லாம் தீயாய் பற்றி எரிகிறது.

அவ்வுணவை சாப்பிடாமல் பார்த்து அஞ்சி ஐயையோ ஆளை விடு  என்று  ஓடுவது போன்று இப்பாடல் முடிக்கப்பட்டுள்ளது.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றவர்; எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என்று வீராப்பு கொண்டவர் ஔவையார். அவ்வீராப்புணர்வுடன்தான் இப்படலைப் புனைந்துள்ளாரோ?

திங்கள், 27 பிப்ரவரி, 2017

விருந்து


               செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

              நல்விருந்து வானத் தவர்க்கு
                                                                                                (அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:86

          வந்த விருந்தினரை அவர்கள் மனம் குளிர்கின்ற வகையில் வரவேற்றும் வேண்டியன செய்தும் அருசுவை விருந்தளித்தும் அவர்கள் விரும்பும் வரை தம் இல்லில் பாதுகாத்து அவர்கள் விரும்பும்பொழுது விருந்தினரை அனுப்பி வைப்பர். இத்தகைய விருந்துதோம்பல் என்பது தமிழ்ப் பண்பாட்டில் தலையாயது ஆகும். 

             சிலப்பதிகாரத் தலைவி கண்ணகியும் கூட கோவலனைப் பிரிந்திருந்த காலத்து இல்லறக் கடமைகளுள் முக்கியமானதான விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று வருந்தியதை, 
                அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும் 
                துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் 
                விருந்தெதிர்க் கோடலும் இழந்த என்னை

என்று கூறுவதிலிருந்து அறியமுடிகிறது. 

     பெரியபுராணத்தில் சிறுத்தொண்டர் புராணத்திலும் கணவன் இல்லாத வீட்டில் யான் உணவு புசிப்பதில்லை; அவர் வரும் வரை யான் கோயில் அருகில் காத்திருப்பேன் என்று பைரவர் வேடத்தில் வந்த சிவபெருமான் சென்றதாக வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

   இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது தமிழர்களின் தலையாயப் பண்பாக விருந்து உபசரித்தல் என்பது இருந்ததை உணரமுடிகிறது.

        ஆனால் இன்று அத்தைகய சிறப்பு மிக்க விருந்து பரிதாப நிலையில் உள்ளதை அவசரகதி நிறைந்த உலகில் கண்கூடாகவும் வேதனையாகவும் பார்க்க முடிகிறது. கூட்டுக் குடும்பத்தில் சிதைவு ஏற்பட்டு தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் விருந்தினரைக் கண்டாலே வேண்டா வெறுப்பாக நோக்குகின்ற அவலத்தைக் காண முடிகிறது.

     இத்தகைய அவலத்தை ஔவையாரும் தம் பாடல் ஒன்றில்  பதிவு செய்துள்ளார். இப்பதிவு பிற்காலத்து ஔவையாரோ அல்லது அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்  என்று   எண்ண வேண்டியுள்ளது. சங்க கால ஔவையாரின் பதிவாக இது இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் சங்க காலத்து விருந்தோம்பலில் குறைவிருந்ததாக அறிய முடியவில்லை.
                    இருந்து முகந்திருத்தி ஈரொடு பேன்வாங்கி
                    விருந்து வந்ததென்று விளம்ப - வருந்தி
                    ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
                    சாடினாள் ஓடோடத் தான் 
என்பது ஔவையாரின் பாடல்.

            நம் வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கிறார் என்று கூறினால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த கணவன் இச்செய்தியை மனைவிக்குத் தெரிவிப்பதற்கு முன்பு அவளை நயந்து கொள்ள நினைக்கிறான்; அவளை மகிழ்விக்க முயற்சிக்கிறான். அவளின் முகத்தைத் தடவிக் கொடுத்தும் அவள் தலையைக் கோதியும் தலையிலுள்ள ஈரையும் பேணையும் எடுத்துக் கொண்டே நம் வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கிறார் என்ற செய்தியைக் கணவன் அவளிடம் கூறினான். அவன் கூறியதுதான் தாமதம், அடுத்த நொடியே மனைவி ஆட்டம் போடுகிறாள்; பாட்டுப் பாடுகிறாள்;(கோபத்தில் அவளது செயல்பாடுகளைக் குறிப்பாக உணர்த்துதல்) கையில் கிடைத்த பழமுறத்தால் கணவனை ஓடோடித் தாக்குகிறாள். இதுதான் மேற்கண்ட பாடலின் பொருள். விருந்து வருந்துவதாக அமைந்ததை உணர்த்தும் பாடல். இன்று விருந்தினர் மட்டுமேயன்றி கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும்கூட விருந்தினராகக்கருதுகின்ற நிலையையும் அந்த விருந்தினர்களுக்கு மேற்கண்ட 'உபசரிப்பையும்' காண்கின்ற பொழுது மனம் வேதனையடைகிறது.

சனி, 25 பிப்ரவரி, 2017

மூவகை மனிதர்

உலக உயிர்களை உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துள்ளார் தொல்காப்பியர். திருவள்ளுவர் "செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார்" என்று இருவகைப்படுத்தி உள்ளார். சேக்கிழாரும் செயற்கரிய செய்தவர்களைப் பெரியர் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் வாழு மனிதர்களை ஔவையார், இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்று கூறியதை அனைவரும் அறிவோம். ஆனால் அவரே மூவகை மனிதரைக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பலரும் அறிந்திருப்பரா எனத் தெரியவில்லை.

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் ஞெய்யார் கயவரே - நல்ல
குலமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலா மாவைப் ஆபதிரியைப் பார்

என்பது ஔவையாரின் பாடல்.

மேற்கண்ட பாடலில் உலகில் வாழும் மனிதர்களை மூவகைப்படுத்தி உள்ளார்.

1. சொல்லாமல் செய்யக்  கூடியவர்கள் பெரியர். இவர்கள் பூவாமல் காய்க்கும் பலா போன்றவர்.

2. சொல்லிச் செய்வர் சிறியர். இவர்கள் பூத்துக் காய்க்கும் மா போன்றவர்.

3. சொல்லியும் செய்யார் கயவர். இவர்கள் பூத்தும் காய்க்காத பாதிரி போன்றவர்கள்.

என்னே ஔவையாரின் உலகியல் அனுபவ அறிவு. உவமை எளிமையும் இனிமையும் உடையது. ஔவையாரின் அற்புதப் பாடல்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

அமுதசுரபியைப் பார்த்தீர்களா? கற்பகத்தருவைக் கண்டீரா?

அமுதசுரபியைப் பார்த்தீர்களா? கற்பகத்தருவைக் கண்டீரா?

அமுதசுரபி
கற்பகத்தரு

படித்திருக்கிறேன்
பாடம் கேட்டிருக்கிறேன்.

முன்னது எடுக்க எடுக்கக் குறையாது
பின்னது கேட்டதையெல்லாம் கொடுக்கக் கூடியது.
படித்திருக்கிறேன்: பாடம் கேட்டிருக்கிறேன்.

அதையே என் மாணவர்களுக்குத் தொடர்ந்து சொல்லிக் கொடுத்தும் வந்திருக்கிறேன்.

ஆனால் எனக்குள் ஒரு நெருடல்…

இப்படியும் இருக்குமா?
எப்படி இருக்க முடியும்?

இந்த நெருடலுக்கு எனக்கு விடை கிடைத்தது.

இணையம்தான்
அமுதசுரபி , கற்பகத்தரு.

ஆம். எடுக்க எடுக்கக் குறையாதது
 அள்ள அள்ளக் குறையாதது
கேட்டதையெல்லாம் வழங்கக்கூடியது.

இப்பொழுது என் மாணவர்களுக்கு எந்த நெருடலுமில்லாமல் பாடம் நடத்துகிறேன்.

நான்
அமுத சுரபியைப் பார்த்திருக்கிறேன்.
கற்பகத்தருவைக் கண்டிருக்கிறேன்.
இணையவடிவில்.

புறநானூற்றுப் பாடல் ஒன்று.
காவற்பெண்டிரால் எழுதப்பட்டது.

சிற்றில் நற்றூண் பற்றி
என்மகன் யாண்டுளன் என வினவுதி
என் மகன் யாண்டுளனாயினும் அறியேன்
ஓரும் புலி சேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

புறநானூற்று வீரத்தாய் தன் மகனை ஈன்ற வயிறுதான் இது.
அவன் இங்கில்லை என்றால் ….
அவன் இருக்குமிடம்  போர்க்களம்.

அகமும் புறமும் தமிழர்களின் இரு கண்கள்.
இருந்தாலும் இப்பாடலுக்கு மேலே சொன்ன விளக்கத்தை
செயற்கையாகவே நான் என் மாணவர்களுக்குக் கூறி வந்தேன்.

இது உண்மைதான்…
இப்படி நடந்திருக்க வாய்ப்புகள் நிறைய உண்டு
என்று எனக்கு உணர்த்தியது
ஜல்லிக்கட்டுப் போராட்டம்.

ஆமாம்…
ஒவ்வொரு வீட்டிலும்
தமிழ்த்தாயரைப் புறநானூற்றுத் தாயரைக் காணமுடிந்தது.

பிள்ளைகளை…
ஆண் பிள்ளை, பெண்பிள்ளை
என்ற பேதமின்றி
போர்க்களத்திற்கு
ஆம்… ஜல்லிக்கட்டுப் போர்க்களத்திற்கு
அனுப்பி வைத்த
நிகழ்காலப் புறநானூற்றுத் தாயரைப் பார்த்த பிறகு

காவற்பெண்டிரின் பாடலுக்கு
என் மாணவர்களுக்கு
நெருடலின்றி… தயக்கமின்றி பாடம் சொல்லுவேன்.

வாழ்க …
எம் புலவர்கள்

இல்லாததைக் கூறிடவில்லை.
நம் புரிதல்தான் கோளாறு.

இலக்கியங்களுக்கு
இணக்கமான
நிகழ்காலச் சம்பவங்கள் சான்றுகளானால்
வகுப்பறைகள் உயிர்ப்படையும்.