ஞாயிறு, 5 மார்ச், 2017

யாருக்குப் பெண்ணைக் கொடுக்கலாம்?

யாருக்குப் பெண்ணைக் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்ற தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் கீழே தரப்படுகின்றன. இப்பாடலைப் பாடியவர் யார் எனத் தெரிந்திலது. (துரை தண்டபாணி அவர்கள் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு மார்ச்சு 2003)

பெண்ணை மணப்பதற்குத் தகுதி உடையவர்

புரைதபு குணனும் சீலமும் வனப்பும்
பூரண ஆயுளும் துப்பும்
கரையில்விற் பனமும் பாலனம் புரியும்
கருத்தரும் குறைவிலாது ஆக
விரவுசெல் வமுமாம் எண்வகை யுடைய
ஆடவர் விருப்புறு வண்ணம்
பரவிநின்று அவர்க்கு மகள்கொடை உதவல்
பருணிதர் கடமைய தாமால்

அருஞ்சொற்பொருள்
 புரைதபு - குற்றமற்ற நற்பண்பு
சீலம் - ஒழுக்கம்
வனப்பு - அழகு
துப்பு - ஆற்றல்
கரையில் - அளவில்லாத
விற்பனம் - கல்வி
பாலனம் புரியும் கருத்தர் - தன்னைச் சுற்றியுள்ளவரைக் காப்பவர்
குறைவிலாது - குற்றமில்லாமல்
விரவு - சேர்த்த
பருணிதர் - அறிவுடையோர்


யாருக்குப் பெண் கொடுக்கக் கூடாது?

முத்தியில் விருப்பம் உடையவன் மிடியன்
மூர்க்கன் சேண் தேயத்தில் உள்ளோன்
புத்தியில் வயிரம் பொருந்திய சூரன்
புதல்விதன் வயதின்மும் மடங்கு
தத்திய வயது ளோன்இனார் தமக்குத்
தரணியில் ஒருவரும் உள்ளம்
நந்திதன் மகளைத் தரத்தகாது என்றாக்
கணிதநூல் நவின்றிடு மன்னோ!

அருஞ்சொற்பொருள்
மிடியன் - வறியவன்
மூர்க்கன் - அரக்கக் குணமுடையவன்
சேண்தேயம் - அயல்நாடு 
வயிரம் - பழி வாங்கும் குணம்
தத்திய - அதிகமான
நந்தி - விரும்பி
கணிதநூல் - சோதிடநூல்
 

வெள்ளி, 3 மார்ச், 2017

03.03.2017இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையில் நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் பங்கேற்று நான் உரை நிகழ்த்தினேன். காட்சி விளக்கமாக எனது உரை அமைந்தது. அதன் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மாண்பமை துணைவேந்தர் அவர்கள் உரை நிகழ்த்தும்பொழுது
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் முனைவர் ஈஸ்வரன்(தேசியக்கல்லூரி, திருச்சி),  முனைவர் அன்பழகன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் தெய்வீகன் அவர்களுடன் மாண்பமை துணைவேந்தர் அவர்கள்




நிகழ்ச்சியில் பங்கேற்றோர்


நான் உரை நிகழ்த்தும்பொழுது

விரல் நுனியில் உலகம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவில் நான் 'விரல் நுனியில் உலகம்' என்னும் தலைப்பில் உரை வழங்கினேன். அதன் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

வியாழன், 2 மார்ச், 2017

தாயர் ஐவர்.....!!! தந்தையரும் ஐவர்...!!!

ஒருவருக்கு ஒரு தாய், ஒரு தந்தை இருப்பதுதான் இயற்கை நியதி. ஆனால் ஐந்து தாயாரும் ஐந்து தந்தையரும் இருக்க முடியுமா? இருக்கிறார்கள் என்கிறார் ஒரு புலவர். அவர் யார் எனத் தெரிந்திலது. (துரை தண்டபாணி அவர்கள் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு மார்ச்சு 2003)
தாயர் ஐவர்

தன்னை அளித்தாள் தமையன்மனை குருவின்
பன்னி அரசன் பயில்தேவி - தன்மனைவியைப்
பெற்றாள் இவரையே பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்.

தன்னைப் பெற்ற தாய், தமையன் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசி, தன் மாமியார் ஆகிய ஐவருமே ஒருவருக்குத் தாயர்தான் என்று ஔவையார் கூறியுள்ளார்.

தந்தையர் ஐவர்

பிறப்பித்தோன் வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்
சிறப்பின் உபதேசம் செய்தோன் - அறப்பெரிய 
பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் பயந்தீர்த்தோன்
எஞ்சாப் பிதாக்களென எண்.

பெற்ற தந்தை, வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவர், உபதேசம் செய்த ஆசான், பஞ்சத்தில் உணவளித்தவர், அச்சம் போக்கியவன் ஆகிய ஐவரும் ஒருவனுக்குத் தந்தையாவர்.

ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு, ஒரு பிள்ளைக்குப் பல தாயர் இருப்பதுண்டோ? என்னும் திரைப்படப் பாடல் எங்கிருந்தோ என் காதில் விழுகிறது. உங்கள் காதில் ஒலிக்கிறதா?

புதன், 1 மார்ச், 2017

அன்பிலாள் இட்ட அமுது

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாண்ஒக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்றது ஐயையோ
அன்பிலாள் இட்ட அமுது - ஔவையார் தனிப்பாடல்

அன்பில்லாத மனைவி மட்டுமல்ல அன்பில்லாதவர்கள் - நம்மை மதிக்காதவர்கள் - வந்த விருந்தினரை மனமார உபசரிக்காதவர்கள் என யாராக இருந்தாலும் உள்ளன்போடு பரிமாறாத உணவை யாரும் உண்ணக் கூடாது. 

அத்தகைய உள்ளன்பு இல்லாத ஒருவர் பரிமாறிய உணவைக் கண்டு அஞ்சி ஔவையார் கூறுவது போன்று மேற்கண்ட பாடல் அமைந்துள்ளது.

இப்பாடலின் பொருள் இதுதான்:
அன்பில்லாதவர் படைத்த உணவைப் பார்ப்பதற்குக் கண் கூசுகின்றது; அவ்வுணவை எடுத்த உண்ண கை கூசுகிறது; ஒருவாறு கையால் எடுத்து வாயில் வைக்க முயன்றால் வாய்திறக்க மறுக்கிறது; அவ்வுணவைப் பார்க்கப் பார்க்க என் உடம்பெல்லாம் தீயாய் பற்றி எரிகிறது.

அவ்வுணவை சாப்பிடாமல் பார்த்து அஞ்சி ஐயையோ ஆளை விடு  என்று  ஓடுவது போன்று இப்பாடல் முடிக்கப்பட்டுள்ளது.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றவர்; எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என்று வீராப்பு கொண்டவர் ஔவையார். அவ்வீராப்புணர்வுடன்தான் இப்படலைப் புனைந்துள்ளாரோ?