திங்கள், 5 டிசம்பர், 2022

மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, சிவகங்கை

மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, சிவகங்கை.

(ஆதாரம்: கல்லூரி மாணவர் கையேடு 2022-23)

    இக்கல்லூரியின் பவளவிழா நிறைவு ஆண்டில் 4.8.2022 முதல் நான் இக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறேன். இக்கல்லூரியைப் பற்றிய சில செய்திகளை ஆவணமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

  • இக்கல்லூரி 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 11 ஆம் நாள் அதாவது இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாகத் துவங்கப்பட்டது.
  • சிவகங்கைச் சீமையை ஆண்ட மன்னர் துரைசிங்கம் பெயரில் இக்கல்லூரியை அவரது மூத்த மகனார் சண்முகராஜா துவங்கினார்.
  • ராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது. 
  • கௌரி விலாஸ் என்ற அரண்மனையின் ஒரு பகுதியில் கல்லூரி வகுப்புகள் நடைபெற்றன.
  • 11.8.1947 அன்று அன்றைய தமிழகக் கல்வி அமைச்சர் தி.க.அவிநாசிலிங்கம் அவர்கள் வகுப்புகளைத் தொடங்கி வைத்தார்.
  • 216.65 ஏக்கர் நிலத்தைக் கல்லூரிக்கென தானமாக வழங்கினார் சண்முகராஜா. (தமிழகத்திலேயே அதிக நிலப்பரப்பு கொண்ட கல்லூரியாக இதுதான் இருக்கும் என்று கருதுகிறேன்)
  • இதுமட்டுமன்றி தான் வைத்திருந்த புத்தகங்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.
  • விளையாட்டுத் திடல், கிளப்ஹவுஸ் ஆகியவற்றையும் தானமாக வழங்கினார்.
  • 1950 இல் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்தினால் இக்கல்லூரியின் செயல்பாட்டில் தேக்க நிலை ஏற்பட்டது.
  • ஆயினும் நல் உள்ளம் கொண்ட அப்பகுதி மக்களால் இந்நிலை மாற்றப்பட்டு 1951 முதல் கல்லூரி தொடர்ந்து செயல்படத் தொடங்கியது.
  • இண்டர்மீடியட் வகுப்புகளும் பி.ஏ. வகுப்புகளும் நடைபெற்றன.
  • 1952இல் தற்பொழுதைய கருங்கல்லாலான முதன்மைக் கட்டடத்தில் கல்லூரி இயங்கத் தொடங்கியது.
  • 1953 இல் மாணவர் விடுதி வாடகைக் கட்டடத்தில் தொடங்கப்பட்டது.
  • 1955-57 இல் கல் கட்டடத்தின் மேல் தளப்பகுதி பயன்பாட்டுக்கு வந்தது.
  • நடுவண் அரசு வழங்கிய ரூபாய் இரண்டு இலட்சத்தில் கட்டப்பட்ட கல் கட்டத்தின் மேலதளத்தில் மாணவர் விடுதி செயல்படத் தொடங்கியது.
  • 1960 இல் இளமறிவியலில் வேதியியல் பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • 1962 இல் கல்லூரிக் கலையரங்கம் கட்டப்பட்டது.
  • 1963-64 இல் நூலகப் பகுதியும் இயற்கை அறிவியல் பகுதியும் கட்டி முடிக்கப்பட்டன.
  • 1964 இல் இளமறிவியலில் விங்கியல் பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • 1966-67 இல் விலங்கியல் துறைக் கட்டடத்தில் மேலும் இரண்டு பெரிய அறைகள் கட்டப்பட்டன.
  • 1967-68 இல் கல்லூரி விடுதி மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
  • இக்கல்லூரியை நிறுவிய மன்னர் சண்முகராஜாவிற்குக் கல்லூரி முன் வாயிலில் 23.10.1969 இல்ஆளுயர சிலை அமைக்கப்பட்டது.
  • 1970 இல்இளங்கலையில் வரலாறு பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • 1971-72 இல் இளமறிவியலில் இயற்பியல் பாட வகுப்புத் தொடங்கப்பட்டது.
  • பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் நிதியுதவியுடன் 1971-72 இல் மாணவர் பொது வசதிக் கூடமும் (Students Amenities Center) சிற்றுண்டியகமும் அமைக்கப்பட்டன.
  • கல்லூரியின் வெள்ளி விழா 1973 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டது.
  • விழாவின் தொடக்க நாளன்று மன்னர் துரைசிங்கத்திற்கு ஆளுயரச் சிலை கல்லூரி வளாகத்திற்குள் நிறுவப்பட்டது.
  • தனியார் கல்லூரி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி (1976) கல்லூரியின் நிர்வாகம் 1.1.1977 முதல் தமிழக அரசின் நேரடிப் பராமரிப்பில் தற்காலிகமாக ஏற்கப்பட்டது.
  • 1.1.1977 முதல் 1.7.1981 வரை தமிழக அரசின் தனி அதிகாரியின் நிர்வாகத்தில் இருந்தது.
  • 1.7.1981 முதல் தமிழக அரசால் ஏற்கப்பட்டு அரசு கல்லூரியாக இயங்கி வருகிறது.
  • அரசு கல்லூரியாக மாறிய பிறகான கல்லூரியின் வளர்ச்சி வரலாறு அடுத்தப் பதிவில் இடம் பெறும்.