திங்கள், 27 பிப்ரவரி, 2017

விருந்து


               செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

              நல்விருந்து வானத் தவர்க்கு
                                                                                                (அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:86

          வந்த விருந்தினரை அவர்கள் மனம் குளிர்கின்ற வகையில் வரவேற்றும் வேண்டியன செய்தும் அருசுவை விருந்தளித்தும் அவர்கள் விரும்பும் வரை தம் இல்லில் பாதுகாத்து அவர்கள் விரும்பும்பொழுது விருந்தினரை அனுப்பி வைப்பர். இத்தகைய விருந்துதோம்பல் என்பது தமிழ்ப் பண்பாட்டில் தலையாயது ஆகும். 

             சிலப்பதிகாரத் தலைவி கண்ணகியும் கூட கோவலனைப் பிரிந்திருந்த காலத்து இல்லறக் கடமைகளுள் முக்கியமானதான விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று வருந்தியதை, 
                அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும் 
                துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் 
                விருந்தெதிர்க் கோடலும் இழந்த என்னை

என்று கூறுவதிலிருந்து அறியமுடிகிறது. 

     பெரியபுராணத்தில் சிறுத்தொண்டர் புராணத்திலும் கணவன் இல்லாத வீட்டில் யான் உணவு புசிப்பதில்லை; அவர் வரும் வரை யான் கோயில் அருகில் காத்திருப்பேன் என்று பைரவர் வேடத்தில் வந்த சிவபெருமான் சென்றதாக வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

   இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது தமிழர்களின் தலையாயப் பண்பாக விருந்து உபசரித்தல் என்பது இருந்ததை உணரமுடிகிறது.

        ஆனால் இன்று அத்தைகய சிறப்பு மிக்க விருந்து பரிதாப நிலையில் உள்ளதை அவசரகதி நிறைந்த உலகில் கண்கூடாகவும் வேதனையாகவும் பார்க்க முடிகிறது. கூட்டுக் குடும்பத்தில் சிதைவு ஏற்பட்டு தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் விருந்தினரைக் கண்டாலே வேண்டா வெறுப்பாக நோக்குகின்ற அவலத்தைக் காண முடிகிறது.

     இத்தகைய அவலத்தை ஔவையாரும் தம் பாடல் ஒன்றில்  பதிவு செய்துள்ளார். இப்பதிவு பிற்காலத்து ஔவையாரோ அல்லது அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவோ இருக்கலாம்  என்று   எண்ண வேண்டியுள்ளது. சங்க கால ஔவையாரின் பதிவாக இது இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் சங்க காலத்து விருந்தோம்பலில் குறைவிருந்ததாக அறிய முடியவில்லை.
                    இருந்து முகந்திருத்தி ஈரொடு பேன்வாங்கி
                    விருந்து வந்ததென்று விளம்ப - வருந்தி
                    ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
                    சாடினாள் ஓடோடத் தான் 
என்பது ஔவையாரின் பாடல்.

            நம் வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கிறார் என்று கூறினால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த கணவன் இச்செய்தியை மனைவிக்குத் தெரிவிப்பதற்கு முன்பு அவளை நயந்து கொள்ள நினைக்கிறான்; அவளை மகிழ்விக்க முயற்சிக்கிறான். அவளின் முகத்தைத் தடவிக் கொடுத்தும் அவள் தலையைக் கோதியும் தலையிலுள்ள ஈரையும் பேணையும் எடுத்துக் கொண்டே நம் வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கிறார் என்ற செய்தியைக் கணவன் அவளிடம் கூறினான். அவன் கூறியதுதான் தாமதம், அடுத்த நொடியே மனைவி ஆட்டம் போடுகிறாள்; பாட்டுப் பாடுகிறாள்;(கோபத்தில் அவளது செயல்பாடுகளைக் குறிப்பாக உணர்த்துதல்) கையில் கிடைத்த பழமுறத்தால் கணவனை ஓடோடித் தாக்குகிறாள். இதுதான் மேற்கண்ட பாடலின் பொருள். விருந்து வருந்துவதாக அமைந்ததை உணர்த்தும் பாடல். இன்று விருந்தினர் மட்டுமேயன்றி கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும்கூட விருந்தினராகக்கருதுகின்ற நிலையையும் அந்த விருந்தினர்களுக்கு மேற்கண்ட 'உபசரிப்பையும்' காண்கின்ற பொழுது மனம் வேதனையடைகிறது.