வியாழன், 2 மார்ச், 2017

தாயர் ஐவர்.....!!! தந்தையரும் ஐவர்...!!!

ஒருவருக்கு ஒரு தாய், ஒரு தந்தை இருப்பதுதான் இயற்கை நியதி. ஆனால் ஐந்து தாயாரும் ஐந்து தந்தையரும் இருக்க முடியுமா? இருக்கிறார்கள் என்கிறார் ஒரு புலவர். அவர் யார் எனத் தெரிந்திலது. (துரை தண்டபாணி அவர்கள் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு மார்ச்சு 2003)
தாயர் ஐவர்

தன்னை அளித்தாள் தமையன்மனை குருவின்
பன்னி அரசன் பயில்தேவி - தன்மனைவியைப்
பெற்றாள் இவரையே பேசில் எவருக்கும்
நற்றாயர் என்றே நவில்.

தன்னைப் பெற்ற தாய், தமையன் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசி, தன் மாமியார் ஆகிய ஐவருமே ஒருவருக்குத் தாயர்தான் என்று ஔவையார் கூறியுள்ளார்.

தந்தையர் ஐவர்

பிறப்பித்தோன் வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்
சிறப்பின் உபதேசம் செய்தோன் - அறப்பெரிய 
பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன் பயந்தீர்த்தோன்
எஞ்சாப் பிதாக்களென எண்.

பெற்ற தந்தை, வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவர், உபதேசம் செய்த ஆசான், பஞ்சத்தில் உணவளித்தவர், அச்சம் போக்கியவன் ஆகிய ஐவரும் ஒருவனுக்குத் தந்தையாவர்.

ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு, ஒரு பிள்ளைக்குப் பல தாயர் இருப்பதுண்டோ? என்னும் திரைப்படப் பாடல் எங்கிருந்தோ என் காதில் விழுகிறது. உங்கள் காதில் ஒலிக்கிறதா?