சனி, 27 நவம்பர், 2010

கோழிப் பாம்பு

கோழிப்பாம்பு என்ற குக்குடசர்ப்பம் குறித்த செய்திகள் சீவகசிந்தாமணி, மேருமந்திர புராணம், ஸ்ரீபுராணம் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன. பாம்புக்கு ஆயுள் நீளுமானால் அதன் உடல் குறுகி கோழி பறக்கும் தூரம் பறக்கும் ஆற்றல் அடையும் என்பதும் இதற்குக் கோழிப்பாம்பு என்பது பெயர் என்பதும் விளங்குகிறது.


மைசூரில் தொட்டபெட்டா மலையின் மேல் பாகுபலி என்ற முனிவரின் உருவம் ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வுருவத்திற்கு அருகில் கோழிப்பாம்பின் உருவம் ஒன்று கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வுருவத்தின் தலையும் கழுத்தும் பாம்பின் உருவமாகவும் உடம்பும் காலும் கோழியின் உருவமாகவும் அமைந்திருக்கின்றன. (காண்க: செந்தமிழ்செல்வி, சிலம்பு 24, பரல் 11)

உதிரப்பட்டி - இரத்தகாணி - நெய்த்தோர் பட்டி

தன் அரசனுக்காக இரத்தம் சிந்திப் போராடி வெற்றி பெற்றவர்களுக்கும் தமக்காக உயிர் நீத்தவர்களுக்கும் அரசன் அவ் வீரர்களது வீரத்தைப் பாராட்டி நிலம் தானம் கொடுப்பது வழக்கம். அத்தகைய நிலங்களுக்கு இரத்தகாணி, உதிரப்பட்டி, நெய்த்தோர் பட்டி என்று பெயர்.



போர்க்களத்தில் பிறருக்காக உயிரைக் கொடுத்தவர்களுக்கு மட்டுமின்றி போரில் இறக்காமல் தனிப்பட்ட முறையில் பிறருக்காகவோ அல்லது பிறர் தொந்தரவு போருக்க முடியாமலோ உயிர் நீத்தவர்களுக்கும் உதிரப்பட்டி என்ற நிலம் தானம் வழங்கப்பட்டுள்ளது.


நெய்த்தோர்பட்டிகை என்று பெருங்கதை கூறுகிறது. நெய்த்தோர் என்றால் இரத்தம் அல்லது உதிரம் என்றும் பட்டிகை என்றால் பத்திரிக்கை என்பதை விட பட்டி என்றும் பொருள் கொள்ளலாம். நெய்த்தோர் பட்டிகை என்று பெருங்கதை கூறுவதை சாசனங்கள் உதிரப்பட்டி என்றும் இரத்தகாணி என்றும் கூறுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பியம் என்ற ஊரில் உதிரப்பட்டி என்ற பெயரில் நிலப்பகுதி இன்றும் இருப்பதாக தி. வை. சதாசிவப்பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.


இதனை நன்கு விளக்கமாக மயிலை சீனி வேங்கடசாமி தமது உதிரப்பட்டி அல்லது இரத்தகாணி என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (காண்க: செந்தமிழ்செல்வி, சிலம்பு 22, பரல் 10. )

திங்கள், 15 நவம்பர், 2010

சிலப்பதிகார 'வரிகள்' - 2

சிலப்பதிகார 'வரிகள்' - 2
தேர்ச்சி வரி:
தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில், பிரிவினால் உண்டாகும் துயர் மிகுதியை, அவளது சுற்றத்தாரிடம் தலைவி கூறிக் கூறி வருந்துவது.

காட்சி வரி:
தலைவன் பிரிவால் உண்டான துயர மிகுதியைக் காதலி பித்துப் பிடித்தவளைப் போல், கண்ணில் படுபவர்களிடம் பண்ணிப் பண்ணிக் கூறுதலாகிய நடிப்பு.

எடுத்துக் கோள் வரி:
பிரிவின்கண் துயருறும் காதலி கையறு நிலையினளாய் மயங்கி விழுதலும், அருகிருந்த சேடியர் அவளைத் தூக்கி எடுத்து மயக்கம் தெளிவிப்பதும்.

இங்ஙனம் சிலப்பதிகாரத்தில் பல தரப்பட்ட 'வரிகள்' இடம் பெற்றுள்ளன. இவற்றின் மூலம் மாதவி தன நடிப்புத் திறத்தால் கோவலனைப் பலவாறாக மகிழ்வித்துத் தன்னிடம் தக்க வைத்துக் கொண்டாள். ஆயினும் கூட, விதி அவர்களைப் பிருத்து வேடிக்கைப் பார்த்தது.

சிலப்பதிகார 'வரிகள்' - 1

சிலப்பதிகார 'வரிகள்' - 1

கண்கூடு வரி:
தான் நயந்து ஏற்ற தலைமகன் கோவலனோடு அவள் வாழ்ந்த மனை வாழ்வில் அவனால் தனக்கொரு நலம் என்ற எண்ணத்தின் எண்ணமும் இல்லாமல் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் அவனை மகிழ்விப்பதே தனக்கொரு புருஷார்த்தம் என்று கொண்டு அவள் வாழ்ந்தது.

உள்வரி:
தனது உருவத்தை மறைத்து வேறொரு பெண்போல் வேடம் புனைந்து தோற்றம் அளிக்கும் விளையாட்டு. ஊடிப்பிரிந்து தலைவன் உற்ற துன்பத்தை அகற்றி மாதவி நடித்த நடிப்புத் தொழில்.


புறவரி: 
 அணிந்து மகிழ விழையும் காதலனை நெருங்காமல் விலகிச் சென்று அவனது வேட்கையை மிகுவிக்கும் விளையாட்டு.

கிளர்வரி:
ஊடிப்பிரிந்து காதலனைச் சேர்த்து வைக்கச் சிலதியர் அவர்களுக்கு இடை நின்று முயல்வதும், அப்பொழுது காதலி, அணைய விழையும் காதலனின் மொழியில் அவன் கருதாத குறிப்பைக் கற்பித்துக் கொண்டு ஊடி அகல்வது.