புதன், 1 மார்ச், 2017

அன்பிலாள் இட்ட அமுது

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாண்ஒக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்றது ஐயையோ
அன்பிலாள் இட்ட அமுது - ஔவையார் தனிப்பாடல்

அன்பில்லாத மனைவி மட்டுமல்ல அன்பில்லாதவர்கள் - நம்மை மதிக்காதவர்கள் - வந்த விருந்தினரை மனமார உபசரிக்காதவர்கள் என யாராக இருந்தாலும் உள்ளன்போடு பரிமாறாத உணவை யாரும் உண்ணக் கூடாது. 

அத்தகைய உள்ளன்பு இல்லாத ஒருவர் பரிமாறிய உணவைக் கண்டு அஞ்சி ஔவையார் கூறுவது போன்று மேற்கண்ட பாடல் அமைந்துள்ளது.

இப்பாடலின் பொருள் இதுதான்:
அன்பில்லாதவர் படைத்த உணவைப் பார்ப்பதற்குக் கண் கூசுகின்றது; அவ்வுணவை எடுத்த உண்ண கை கூசுகிறது; ஒருவாறு கையால் எடுத்து வாயில் வைக்க முயன்றால் வாய்திறக்க மறுக்கிறது; அவ்வுணவைப் பார்க்கப் பார்க்க என் உடம்பெல்லாம் தீயாய் பற்றி எரிகிறது.

அவ்வுணவை சாப்பிடாமல் பார்த்து அஞ்சி ஐயையோ ஆளை விடு  என்று  ஓடுவது போன்று இப்பாடல் முடிக்கப்பட்டுள்ளது.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றவர்; எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என்று வீராப்பு கொண்டவர் ஔவையார். அவ்வீராப்புணர்வுடன்தான் இப்படலைப் புனைந்துள்ளாரோ?