ஞாயிறு, 5 மார்ச், 2017

யாருக்குப் பெண்ணைக் கொடுக்கலாம்?

யாருக்குப் பெண்ணைக் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்ற தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்கள் கீழே தரப்படுகின்றன. இப்பாடலைப் பாடியவர் யார் எனத் தெரிந்திலது. (துரை தண்டபாணி அவர்கள் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு மூலமும் உரையும், உமா பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு மார்ச்சு 2003)

பெண்ணை மணப்பதற்குத் தகுதி உடையவர்

புரைதபு குணனும் சீலமும் வனப்பும்
பூரண ஆயுளும் துப்பும்
கரையில்விற் பனமும் பாலனம் புரியும்
கருத்தரும் குறைவிலாது ஆக
விரவுசெல் வமுமாம் எண்வகை யுடைய
ஆடவர் விருப்புறு வண்ணம்
பரவிநின்று அவர்க்கு மகள்கொடை உதவல்
பருணிதர் கடமைய தாமால்

அருஞ்சொற்பொருள்
 புரைதபு - குற்றமற்ற நற்பண்பு
சீலம் - ஒழுக்கம்
வனப்பு - அழகு
துப்பு - ஆற்றல்
கரையில் - அளவில்லாத
விற்பனம் - கல்வி
பாலனம் புரியும் கருத்தர் - தன்னைச் சுற்றியுள்ளவரைக் காப்பவர்
குறைவிலாது - குற்றமில்லாமல்
விரவு - சேர்த்த
பருணிதர் - அறிவுடையோர்


யாருக்குப் பெண் கொடுக்கக் கூடாது?

முத்தியில் விருப்பம் உடையவன் மிடியன்
மூர்க்கன் சேண் தேயத்தில் உள்ளோன்
புத்தியில் வயிரம் பொருந்திய சூரன்
புதல்விதன் வயதின்மும் மடங்கு
தத்திய வயது ளோன்இனார் தமக்குத்
தரணியில் ஒருவரும் உள்ளம்
நந்திதன் மகளைத் தரத்தகாது என்றாக்
கணிதநூல் நவின்றிடு மன்னோ!

அருஞ்சொற்பொருள்
மிடியன் - வறியவன்
மூர்க்கன் - அரக்கக் குணமுடையவன்
சேண்தேயம் - அயல்நாடு 
வயிரம் - பழி வாங்கும் குணம்
தத்திய - அதிகமான
நந்தி - விரும்பி
கணிதநூல் - சோதிடநூல்