வியாழன், 30 செப்டம்பர், 2010

எனக்குப் பிடித்த கவிதை


பெண்மை



அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மைத் தன்மையும் உறுதியும் மிகுந்தும்
தன்னல மறுப்பும் சகிப்புத் தன்மையும்
இயல்பாய் அமைந்தும் இன்பச் சொரூபமாய்த்
தாயாய் நின்று தரணியைத் தாங்கும்
தாரமாய் வந்து தளர்வைப் போக்கும்
உடன் பிறப்பாகி உறுதுணை புரியும்
மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்
அயலார் தமக்கும் அன்பே செய்யும்
நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்
சிநேகம் இன்றியும் சிரித்துப் பேசும்
காமம் இல்லாமலும் கொஞ்சிக் களிக்கும்
பெருமை மிக்கது பெண்ணியல் பாகும்
அந்தப் பெருமையை அறியா ஆடவர்
அன்புப் பேச்சை ஆசையென்று அயிர்த்து
சிரித்து விட்டதில் சிற்றின்பம் எண்ணி
களிப்பைக் காமமாய்க் கற்பனை செய்தே
அவமதிப் படைவதும் அடிக்கடி உண்டு
இப்படிப் பலபேர் ஏமாந்து போவதால்
பெண்மனம் என்பதைப் பிழைபடப் பேசிப்
புதிர் என்று சொல்வது புரியாத் தனமே
வஞ்சனை என்பர் வஞ்சகம் உடையோர்

- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

கருத்துகள் இல்லை: