ஞாயிறு, 8 மே, 2011

அகத்தியர்

அகத்தியரால் எழுதப்பட்டது அகத்தியம் ஆகும். இதுவே முதல் இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்நூல் கிடைக்கப்பெறவில்லை என்பது வருந்தத் தக்கதாகும். இதனை முதல் நூலாகக் கொண்டே தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலைப் படைத்தார்.

அகத்தியர் பற்றிய குறிப்புகள்:

அகத்தியர் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்திலோ அதன் பாயிரத்திலோ எதுவும் இல்லை. இதைப்போலவே சங்க இலக்கியத்திலும் எக்குறிப்புகளும் இல்லை.

பரிபாடலில் "பொதியின் முனிவன்" என்ற குறிப்பு உள்ளது. இதற்கு அகத்தியன் என்னும் மீன் என்று பரிமேலழகர் உரை கூறுகிறார்.

மணிமேகலையில், "அமர முனிவன் அகத்தியன்" என்ற குறிப்பு காணப்படுகிறது. இதனையே அகத்தியர் பற்றிய முதல் குறிப்பு என்று கூறலாம். உரையாசிரியர்களான அடியார்க்கு நல்லார், அரும்பத உரையாசிரியர், நச்சினார்க்கினியர் உரைகளில் "பொதியம், தவமுனி, திருமுனி" என்று வருவனவற்றிற்கு அகத்தியர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வடமொழி நூல்களில் அகத்தியர் என்ற சொல்லாட்சி நிரம்ப காணப்படுகிறது.

அகத்தியர் பற்றிய இலக்கியப் பதிவுகள் இங்ஙனமிருக்க, தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் என்பதும் இவருக்கு பன்னிரு மாணாக்கர் இருந்தனர் என்பதும் அவர்களுள் தொல்காப்பியரே தலை மாணாக்கர் என்பதும் கற்பனையானவை ஆகும். அகத்தியர் பெயரில் வந்துள்ள நூல்களும் போலியானவையே ஆகும். வேறு யாரோ எழுதி அகத்தியர் எழுதியதாக உலவ விட்டுள்ளனர். இவர் பெயரில் வெளி வந்துள்ள நூல்களில் மருத்துவ நூல்களே அதிகம். அகத்தியர் பற்றி தமிழகத்தில் உலவும் கற்பனை கலந்த கதைகளில் ஒன்று இவருக்கும் தொல்காப்பியருக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் ஒரு பிரச்சனை. இது குறித்து அடுத்து எழுதுவேன்.

கருத்துகள் இல்லை: