ஞாயிறு, 29 நவம்பர், 2009

நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார்

நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார் - இவர் சங்கப் புலவர். நற்றிணையில் 382 ஆம் செய்யுள் இவர் பாடியது. நிகண்டு நூல் ஒன்றை எழுதியமையால் நிகண்டனார் என்ற பெயர் பெற்றார் என்றும் மான் கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் (கைத்தடியாக) கொண்டமையால் கலைக்கோட்டுத் தண்டனார் என்ற பெயர் பெற்றார் என்றும் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகிறார்.

இதனை மயிலை சீனி. வேங்கடசாமி பின்வருமாறு மறுத்துரைக்கிறார்:

நிகண்டு நூல் செய்தமையால் நிகண்டனார் என்று பெயர் பெற்றிருக்க மாட்டார். மாறாக நிகண்டாசிரியர் என்றே அழைக்கப் பெற்றிருப்பார். நிகண்டன் என்றால் சமண சமயத்தார் என்று பொருள். எனவே இவர் சமணசமயத்தவராக இருக்கலாம். எனவே இவர் நிகண்டனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

மான் கொம்பை கைக்கோலாகக் கொண்டமையால் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கப்பட்டார் என்பதும் சரியானது இல்லை. சமதண்டம் என்பது ஓர் ஊரின் பெயர். அதுபோல கலைக்கோட்டுத்தண்டம் என்பதும் ஓர் ஊரின் பெயராக இருக்கலாம். அவ்வூரைச் சேர்ந்தவரான இப்புலவர் அவ் ஊரின் பெயரால் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

எனவே, சமண சமயத்தைச் சேர்ந்த நிகண்ட வாதியான இவர் நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார் என்று அழைக்கபட்டார் என்பது மயிலாரின் ஆய்வு முடிபு ஆகும்.

கருத்துகள் இல்லை: