ஞாயிறு, 29 ஜனவரி, 2017

அமுதசுரபியைப் பார்த்தீர்களா? கற்பகத்தருவைக் கண்டீரா?

அமுதசுரபியைப் பார்த்தீர்களா? கற்பகத்தருவைக் கண்டீரா?

அமுதசுரபி
கற்பகத்தரு

படித்திருக்கிறேன்
பாடம் கேட்டிருக்கிறேன்.

முன்னது எடுக்க எடுக்கக் குறையாது
பின்னது கேட்டதையெல்லாம் கொடுக்கக் கூடியது.
படித்திருக்கிறேன்: பாடம் கேட்டிருக்கிறேன்.

அதையே என் மாணவர்களுக்குத் தொடர்ந்து சொல்லிக் கொடுத்தும் வந்திருக்கிறேன்.

ஆனால் எனக்குள் ஒரு நெருடல்…

இப்படியும் இருக்குமா?
எப்படி இருக்க முடியும்?

இந்த நெருடலுக்கு எனக்கு விடை கிடைத்தது.

இணையம்தான்
அமுதசுரபி , கற்பகத்தரு.

ஆம். எடுக்க எடுக்கக் குறையாதது
 அள்ள அள்ளக் குறையாதது
கேட்டதையெல்லாம் வழங்கக்கூடியது.

இப்பொழுது என் மாணவர்களுக்கு எந்த நெருடலுமில்லாமல் பாடம் நடத்துகிறேன்.

நான்
அமுத சுரபியைப் பார்த்திருக்கிறேன்.
கற்பகத்தருவைக் கண்டிருக்கிறேன்.
இணையவடிவில்.

புறநானூற்றுப் பாடல் ஒன்று.
காவற்பெண்டிரால் எழுதப்பட்டது.

சிற்றில் நற்றூண் பற்றி
என்மகன் யாண்டுளன் என வினவுதி
என் மகன் யாண்டுளனாயினும் அறியேன்
ஓரும் புலி சேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

புறநானூற்று வீரத்தாய் தன் மகனை ஈன்ற வயிறுதான் இது.
அவன் இங்கில்லை என்றால் ….
அவன் இருக்குமிடம்  போர்க்களம்.

அகமும் புறமும் தமிழர்களின் இரு கண்கள்.
இருந்தாலும் இப்பாடலுக்கு மேலே சொன்ன விளக்கத்தை
செயற்கையாகவே நான் என் மாணவர்களுக்குக் கூறி வந்தேன்.

இது உண்மைதான்…
இப்படி நடந்திருக்க வாய்ப்புகள் நிறைய உண்டு
என்று எனக்கு உணர்த்தியது
ஜல்லிக்கட்டுப் போராட்டம்.

ஆமாம்…
ஒவ்வொரு வீட்டிலும்
தமிழ்த்தாயரைப் புறநானூற்றுத் தாயரைக் காணமுடிந்தது.

பிள்ளைகளை…
ஆண் பிள்ளை, பெண்பிள்ளை
என்ற பேதமின்றி
போர்க்களத்திற்கு
ஆம்… ஜல்லிக்கட்டுப் போர்க்களத்திற்கு
அனுப்பி வைத்த
நிகழ்காலப் புறநானூற்றுத் தாயரைப் பார்த்த பிறகு

காவற்பெண்டிரின் பாடலுக்கு
என் மாணவர்களுக்கு
நெருடலின்றி… தயக்கமின்றி பாடம் சொல்லுவேன்.

வாழ்க …
எம் புலவர்கள்

இல்லாததைக் கூறிடவில்லை.
நம் புரிதல்தான் கோளாறு.

இலக்கியங்களுக்கு
இணக்கமான
நிகழ்காலச் சம்பவங்கள் சான்றுகளானால்
வகுப்பறைகள் உயிர்ப்படையும்.



கருத்துகள் இல்லை: