ஞாயிறு, 27 அக்டோபர், 2019

பட்டமளிப்பு உரை - 2 அரசு மகளிர் கல்லூரி, கும்பகோணம்.






















                    படிப்பு நமது உரிமைசமூகப்பணி நமது கடமை

முதல்வர் அவர்களே, கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களே. பல்கலைக்கழகப் பிரதிநிதிகளே, பேராசிரியப் பெருமக்களே பெற்றோர்களே மற்றும் பட்டம் பெற பெருவிழைவோடு காத்திருக்கும் மாணவியர்களே உங்களுக்கு எனது வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்கு என்னை அழைத்த இக்கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். அருகாமையில் உள்ள ஆடவர் கல்லூரி பேராசிரியராக நான் பணியாற்றிய போது இக்கல்லூரிக்கு பல்வேறு பணிகளுக்காக இங்கு வந்துள்ளேன் எனினும் இந்நிகழ்வு புதியதொரு அனுபவத்தைத் தருகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு வருங்காலத் தலைமுறைகளாகிய உங்களின் பணி மிகவும் அவசியமானதாகும். சமுதாயச் சீர்திருத்தம் வேறு சமூகக் கடமை வேறு. சீர்திருத்தம் எதிர்ப்புகளைத் தேடித் தரும். சேவை உங்களுக்கு மனநிறைவைத் தரும்.
கல்வியாளர்கள் சிறந்த நாடு நம்நாடு இருப்பினும், அறியாமை நிலவும் நாடு; மருத்துவர்களில் சிறந்தவர் இந்நாட்டிலே உண்டு; இருப்பினும் பிணிகளும் உண்டு. பல்வகையான வளங்களும் உண்டு; இருப்பினும் பங்கீட்டு முறைகளில் குறைகளும் உண்டு. இப்படி எதில் எடுத்தாலும் இருப்பினும் என்ற சொல் இருக்கும் நிலை நாட்டில் உள்ளது; இந்நிலை மாற வேண்டும்.
இந்தக் குடந்தை மண், உலகிற்கு ஆன்மீக மண் என்ற பெருமை உள்ளது. எனினும், இம்மண்ணில் பிறந்த தியாகிகள் பலர்; கல்வியாளர்கள் பலர்; இத்தகைய மண்ணில் பெண்கள் ஏற்றம் காண 50 ஆண்டுகளாக முனைப்புடன் இயங்கிவரும் பெருமைமிகு அரசினர் கல்லூரியில் நீங்கள் பட்டம் பெற இருக்கீன்றீர் என்ற பெருமை உங்களுக்கு இருக்க வேண்டும்.


ஆய்ந்தறிதல் வேண்டும் அதற்கேற்ப அஞ்சாமை வேண்டும். இன்றேல் சிந்தனையைச் சிறையிலிட்டுக் கொடுமையினை அரசாட்சி செய்வதற்கு உடந்தையாகி விடுவோம் என்று அறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறியதை ஈண்டு நினைவு கூர்கின்றேன். நமது அறிவு, கொடுமைகளைக் கண்டு அஞ்சாது துணிந்து போராடும் மனத்திடத்தை நமக்கு அளிக்க வேண்டும்.

பட்டம் பெறும் இந்த நாள் நமது உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கிடும் நன்னாள் என்பதில் ஐயமன்று. ஆயினும் மகிழ்ச்சிக்கு மட்டுமே உரியதன்று. நாட்டின் புகழை ஏற்றம் செய்வதற்கு உரிய பணியைத் துவங்கிடுவதற்குரிய நன்னாளாக இதனை நீங்கள் உணர வேண்டும்.
ஒவ்வொரு மனிதன் மனதிற்குள்ளும் நல்லொழுக்கத்தின் குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். அதை உற்றுக்கேட்டால் யாருக்கும் தவறு செய்யத் தோன்றாது. இன்றைய இளையோருக்கு ஒரு வேண்டுகோள். அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட்து முதலில் ஆலகால விம்தான். அதன் பின்பு வந்ததுதான் உயிர்காக்கும் அமுதம். படிக்குக் வயதிலேயே அவசரப்பட்டு ஆலகால விஷத்தை அருந்துவதைவிட புலனடக்கம் காத்துப் பின் அமுதம் பருகுங்கள்.
இது போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகம். தகுதியுள்ளது உயிர் வாழும் என்னும் உயிரியல் விதிக்கேற்ப தமது இருப்பைத் தக்க வைக்க ஒவ்வொருவரும் போராட வேண்டியுள்ளது, முயற்சியும் உழைப்பும் மனிதனை நேர்மையாய் உயர்த்தும் படிநிலைகள். அப்படிநிலை இல்லை எனின் மனிதனுக்கு வளர்ச்சி இல்லை; வாழ்க்கை என்பது இல்லவே இல்லை.
வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!" என்பது ஆன்றோர் மொழி. விதியினை நொந்து கொள்ளாது கீழே வீழ்ந்த எவனொருவன் வீழ்வது எழுவதற்கே என்று எழுகின்றானோ அவனே  முயற்சியின் மூல மந்திரம் அறிந்தவன். ஐன்ஸ்டீனுக்கு அடுத்து மாபெரும் விஞ்ஞானி எனக் கருதப்பட்ட ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மரணம் அடைந்ததாக அறிவிக்கபட்டிருக்கின்றது
மிகப் பெரும் அறிவாளி அவர். விண்வெளி ஆராய்ச்சி அவரின் பிடித்தமான விஷயம். இளம் வயதிலே டாக்டர் பட்டம் வாங்கிய ஹாக்கின்ஸ் 21 வயதில் மிகக் கடுமையான நரம்பு நோயினால் பாதிக்கpபட்டார். அதாவது கை கால் அசையாது, பேசமுடியாது. கிட்டத்தட்ட பக்கவாத நிலை.. என்ன செய்துவிட முடியும்? ஆனால் அவரின் அறிவினைப் பாழாக்க விரும்பா விஞ்ஞான சமூகம் அவருக்கு பிரத்யேஎந்திரத்தைத் தயார் செய்தது, ஆம் விழி அசைவில் இயங்கும் கணிணி மூலம் உலகோடு பேசத் தொடங்கினார்
கவனியுங்கள், பேனா இல்லை பேப்பர் இல்லை, புத்தக குறிப்புகளுமில்லை ஆனால் அவர் தன் ஆராய்ச்சி முடிவினை கண்களால் சொன்னபொழுது உலகம் அதிர்ந்தது இவரின் இயற்பியல் கணிதத்தை எளிய முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் சூத்திரமான "காலம் ஒரு வரலாற்று சுருக்கம்" எனும் திட்டத்தை உலகம் ஏற்றுகொண்டது, அதற்காக அவருக்கு 6 மில்லியன் டாலர் பரிசும் கிடைத்தது. அவர் எழுதிய இரு புத்தகங்கள் A Brief History of Time, The Universe in a Nutshell விஞ்ஞான உலகின் புதிய ஏற்பாடாகக் கொண்டாடப்படுகின்றன‌. கண்களைத் தவிர ஏதும் அசைக்க முடியா மனிதனா இவ்வளவு விஷயங்களைக் கொடுத்தான் என நம்பவே முடியாத அதிசயம் அவர்.
விஞஞானிகள் ஒவ்வொரு முடிச்சையும் விட்டுச் செல்வார்கள், அதனை இன்னொரு விஞ்ஞானி வந்து அவிழ்ப்பார், இந்தச் சங்கிலி தொடரால்தான் இவ்வுலகம் இவ்வளவு மாற்றங்களைப் பெற்றது. அப்படி கலிலியோ, கோபர் நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் வந்தவர் ஹாக்கின்ஸ். விண்வெளி இயற்பியல், குவாண்டம், காஸ்மோலாஜி என பல துறைகளை எங்கோ இழுத்து நிறுத்திவிட்டு மறைந்திருக்கின்றார். இனி வரும் உங்களில் ஒருவராகப் பட்டம் பெறும் இளம்விஞ்ஞானிகள் அதிலிருந்து இன்னும் உயர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.


உயர்கல்வியைக் கட்டிக் காத்திட செலவிடப்படும் தொகை அனைத்தும் இச்சமூகத்தின் வருவாயிலிருந்து செலவிடப்பட்டவையாகும். இந்தப் பெண்கள் கல்லூரியிலிருந்து பட்டம் பெறும் பட்டதாரிகளே! நீங்கள் எவ்வாறு இச்சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? என்று நான் உங்களைக் கேட்க விழைகின்றேன்? நீங்கள் இந்தச் சமூகத்திற்குத் திருப்பித் தராத வகையில் வரும் தலைமுறையினர் வெறும் கருவூலத்தையே காணவேண்டி வரும்.
நீங்கள் பெறும் உயர் கல்வி, சமூகத்திற்கு செய்யவேண்டிய பொறுப்பை உங்களுக்கு அதிகரிக்கச் செய்கிறது. ஆகவே, உங்கள் லட்சியம் சீரிய குறிக்கோளாக அமைய வேண்டும். உங்கள் மீது உங்கள் பெற்றோர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்; உங்கள் மீது உங்கள் பேராசிரியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்;
அது போன்று உங்கள் மீது மிகுதியான நம்பிக்கை வைத்திருப்போர்களில் நானும் ஒருவன் புதியதோர் உலகம் செய்வோம் என்னும் புரட்சிக் கவியின் வாக்கினை மெய்ப்பிக் உங்களைவிடச் சிறந்த திறன் பெற்றவர் யார் இருக்க முடியும்? உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி. ஆகவே, விருப்பமான துறைகளில் ஈடுபடவிருக்கும் பட்டம் பெற்ற மாணவியர் தாங்களால் இயன்ற சமூகசேவையைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் பயணம் செய்யும் உலகம், உங்கள் எண்ணத்தை மங்கச் செய்யலாம்; உறுதிபாட்டைக் குலைக்கலாம்; தன்னலம் தேடுவோர் அரியணை ஏறுவதையும் உண்மையாய் உழைப்பவர்களுக்குப் பொல்லாங்கு பேசப்படுதலையும் நீங்கள் காணலாம். ஆனால், சேவை மனப்பான்மையுடன் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் மனவூக்கத்தோடு செயலாற்றுபவர்களுக்கு வெற்றி வசமாகித் தான் உள்ளது என்பது காலம் உணர்த்தும் உண்மை.
தமிழர்களாகிய நாம் ஈராயிரம் ஆண்டுகளாக உயர்த்திப் பிடித்த உண்மையுங்கூட என்பதை புறநானூற்றுக் கவிதை வாயிலாக அறிகின்றோம். இந்த உலகம் எதனால் வாழ்கிறது, அதாவது உண்டாலம்ம இவ்வுலகம் என்ற வினாவுடன் தொடங்கித் தனக்கென வாழா பிறர்க்கென முயலும் வாழுநரால் என்ற விடையுடன் முடியும் கவிதையின் வலிமை இன்றும் இக்கவிதை போற்றப்படுதலுக்கு காரணமாக அமைகின்றது.
தற்போது நீங்கள் வாழும் இந்தியாவின் நிலையில் இருந்து  சற்றே உயர்த்தி உங்கள் காலத்தில் சற்றே உயர்த்திப் பிடித்தால் நான் இந்த உரையாற்றியதன் எதிர்வினையாய்க் கருதி மிகுந்த உவகையடைவேன் என்று கூறி இவ்விழா உரையினை நிறைவு செய்கின்ற வேளையில் பட்டம் பெறுகின்ற உங்கள் அனைவரையும் மீண்டும் வாழ்த்தி விடைபெறுகின்றேன்  நன்றி வணக்கம். 





கருத்துகள் இல்லை: