ஞாயிறு, 4 டிசம்பர், 2022

அணிந்துரை - ஆசிரியர் மோகன்

 

அணிந்துரை


மரபுக் கவிதைகள் எழுதுவதும் படிப்பதும் அருகி வரும் இக்காலக் கட்டத்தில்  சித்திரக் கவிதைகளைப் பற்றி கூறத்தேவையில்லை. சித்திரக் கவிதைகளைப்  படிப்பதற்கே தனித்திறன் தேவை. எழுதுவதற்கோ மீத்திறன் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அத்தகைய மீத்திறனைப் பெற்றவராக வெண்பா மோகன் திகழ்கிறார் என்பதன் வரலாற்று சாட்சியமாக இந்நூல் விளங்குகிறது.

‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்’

என்ற தமிழ்ப்பாட்டி ஔவையின் கூற்றுக்கு நிகழ்கால விளக்கமாகத் திகழும் இவர்  மிகக் குறுகிய காலத்திலேயே மரபுக் கவிதை படைக்கத் தொடங்கி சித்திரக் கவி எழுதுகிற அளவிற்குத் தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆம், ‘நாளும் ஒரு நல்வெண்பா’ என்ற குறிக்கோளோடு கவிதை படைக்கத் தொடங்கிய இவர்  சுமார் மூன்று ஆண்டுகாலப் பயிற்சியிலேயே இத்தகைய சாதனையைச் சாத்தியமாக்கி உள்ளார்.

இதனை, ‘நாளும் ஒரு நல்வெண்பா என்று தினமும் ஒரு வெண்பாவைத் தத்தித் தவறித் தவழ்ந்து எழுதிப் புலனத்தில் பதிவு செய்து கொண்டிருந்த என்னை எழுதக் கற்றுக் கொடுத்தும் ஊக்கப்படுத்தியும், படிப்பவர்கள் தவறுகளைத் திருத்தி எழுதத் தூண்டிய வேட்கையானது நூல் வெளியிடும் அளவிற்கு வரும் என்று நான் நினைக்கவில்லை. முதலில் எழுதுங்கள் என்று தூண்டிய குடந்தை இலக்கியப் பேரவை அன்பர்களுக்கும்……’ என்று அவர் தம் முதல் நூலில் ‘என்னுரை’யில் தந்துள்ள அகச்சான்றின் மூலமும், 15.1.2017 இல் தான் இவர் குறிப்பிடும் குடந்தை இலக்கியப் பேரவை தொடங்கப்பட்டது என்ற புறச்சான்றின் மூலமும் உறுதிப் படுத்த முடிகிறது.

‘நாளும் ஒரு நல் வெண்பா – கதம்பமாலை என்ற முதல் தொகுதியை ஆகஸ்டு 2021 இல் வெளியிட்ட இவர், ‘நாளும் ஒரு நல் வெண்பா – சிந்தனைச் சிந்தியல் நாற்பொருள் ஆயிரம்’ என்ற இரண்டாம் தொகுதியை ஜனவரி 2022 இல் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்நூல் மூன்றாம் தொகுதியாக வெளிவருகிறது. சுமார் இரண்டு ஆண்டு கால இடைவெளியில் மூன்று மரபுக் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார் என்பதிலிருந்தே இவரின் தீராத் தமிழ்த் தாகத்தையும் கவிதை மோகத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. ‘முயற்சி திருவினையாகி’ இருக்கிறது. இது இன்றைய மாணவச் செல்வங்களுக்கும் – ஏன் தமிழாசிரியர்களுக்கும் கூட முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்ற செய்தியை குறிப்பால் உணர்த்துகிறது.

   

‘வண்ணந்தானே நாலைந்தென்ப’ என்ற தொல்காப்பியரின் சிந்தனைகளைச் சித்திரக்கவிக்கான வித்தாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தண்டி ஆசிரியர் 12 வகை சித்திரக்கவிகளைக் குறிப்பிட்டுள்ளார். அதன் உரையாசிரியர்கள் மேலும் 8 வகை சித்திரக் கவிதைகளைக் குறிப்பிடுகின்றனர்.

சித்திரக் கவிதைகளை ‘ஓவியக் கவிதைகள்’ என்று பேராசிரியர் ச.திருஞானசம்பந்தம் அவர்கள் குறிப்பிடுகிறார். பாடுபவர் தம் மொழிப் புலமையையும் மொழியின் செழுமையையும் பிறருக்கு வெளிப்படுத்தும் பாங்கில் சித்திரக் கவிதைகளைப் படைக்கின்றனர். தமிழ் மொழியைத் தவிர வேறு மொழிகளில் சித்திரக்கவிதைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

மொழி வளத்தையும் கவிஞர்களின் புலமைத் திறத்தையும் காட்டக்கூடிய இத்தகைய கவிதை வடிவம் ஏறக்குறைய அழிந்த நிலைக்குப் போய்விட்டது என்ற மனக் காயத்திற்கு மருந்து போடும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இக் கவிதை வடிவத்தை அழியாமல் பாதுகாப்பதும் வளர்த்தெடுப்பதும் இன்றைய தலைமுறையினர் மனம் வைத்தால் சாத்தியமாகும். 

பாவலர் மோகன் அவர்கள் படைத்துள்ள இந்நூலின்கண் 30க்கும் மேற்பட்ட சித்திரக் கவிதைகளின் வகைப்பாடுகளுள் அடக்கத்தக்கவையாக 72 சித்திரக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் ஏதுவாகப் படிக்கும் முறைமை மற்றும் பொருள் குறிப்புகளையும் நூலாசிரியர் வழங்கி உள்ளார். இது படிப்பவர்களின் தடுமாற்றத்தைத் தடுக்கும் என்று உறுதிபட நம்பலாம்.

நூலாசிரியருக்குக் கவிதை இயல்பாகவே வருவதை அவரது சொல்லாட்சித் திறனும் கவிதைப் பொருளும் கவிதை நடையும் தெற்றெனப் புலப்படுத்துகிறது. சொற்களைத் தேடி கவிஞர் அலைவதைக் கவிதையில் காணமுடியவில்லை. சொற்கள் அவரைத் தேடி வந்து கவிதையில் இடம் பிடித்து விடுகின்றன. இது இவரது கவிதைக்குக் கூடுதல் பலம். கலைமகளின் திருவருள் இவருக்குக் கைகூடப் பெற்றதனால் இது சாத்தியமாயிற்று என்றே நான் கருதுகிறேன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் புதுப்புதுக் கவிதைகளைப் படைப்பதை நோக்கமாகக் கொண்டு இவர் செயல்பட்டு வருகிறார். எனவே இவரைக் கார்மேகப் புலவர் என்பது போல இவரைக் ‘கவிமேகப் புலவர்’ என்று அழைப்பது சாலப் பொருந்தும்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒன்று, அழிந்து வரும் சித்திரக் கவிதைகளுக்கு இவர் உயிர்ப்பு தந்துள்ளார். மற்றொன்று, தன்னை இந்த அளவிற்கு உயர்த்தியதாக இவர் குறிப்பிடும் குடந்தை இலக்கியப் பேரவையைத் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தவன் நான். அப்பேரவைத் தொடங்கி வைக்கும் நல்வாய்ப்புக் கிடைக்கப் பெற்ற நான் அப்பேரவைப் பெற்றெடுத்து ஆளாக்கிய இக்கவிப் புதல்வனின் இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதிலும் பெருமை கொள்கிறேன். பாவலர் மோகன் அவர்கள் மேலும் பல அரிய கவி மாலைகளைப் புனைந்து அன்னைத் தமிழுக்கு அணிகலன்களாக சூட்ட வேண்டும்; தமிழ் கூரும் நல்லுலகு இவரைப் புரந்தருளி ஊக்கப்படுத்த வேண்டும் என்று மனங்குளிர பாராட்டுகிறேன்.

                                                                                         வளர் அன்புடன்,

கும்பகோணம்,

24.10.2022.                                                                          (முனைவர் க.துரையரசன்)

கருத்துகள் இல்லை: